தவெக ஆட்சி அமைக்க ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்த நிலையில், அக்கட்சியின் மூத்த தலைவர்கள் விஜய்யை அவரது பனையூர் அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். தவெக – காங்கிரஸ் கூட்டணி அறிவிப்புக்குப் பின் நடந்த இந்தச் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.
தவெக கட்சிக்கு ஆதரவு அளிப்பது குறித்து காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதவாத சக்திகளுக்கு ஆதரவாக செயல்படக் கூடாது என்ற நிபந்தனையுடன் ஆதரவு அளிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் திமுக உடனான காங்கிரஸ் கூட்டணி முடிவுக்கு வந்துள்ளது.
இந்தநிலையில் காங்கிரஸின் இந்த செயலுக்கு, அக்கட்சியின் இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் அலிம் அல்புகாரி (Alim Albuhari) எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ”கொள்கைப் பிடிப்பே அரசியல், சந்தர்ப்பவாதம் அல்ல. இதே சந்தர்ப்பவாதத்தை பாஜகவும் அதிமுகவும் செய்து வருகிறது. இப்போது நாம் அதை செய்யக்கூடாது” என கூறியுள்ளார்.
இந்த பதிவில் ராகுல் காந்தி, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை, தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் மற்றும் இளைஞர் காங்கிரஸ் தேசிய தலைவர் உதய் பானு சிப் ஆகியோரை அலிம் அல்புகாரி ‘டேக்’ (Tag) செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
