தேர்தலுக்கு முன் பூத் ஸ்லிப் எப்போது வழங்கப்படும்? – தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

தமிழகத்தில் 2026ஆம் ஆண்டிற்கான சட்டமன்றத் தேர்தல் தொடர்பான முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் தேர்தல், இந்தியாவின் முக்கியமான தேர்தல்களில் ஒன்றாக கருதப்படுகிறது. தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட உள்ளது. இதற்கிடையில், மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் ஏற்கனவே அமலில் உள்ளன.

இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை (EPIC) பெற்றுள்ள அனைவரும் வாக்களிக்கும் முன் வாக்குச்சாவடியில் தங்களது அடையாளத்தை உறுதிப்படுத்த அந்த அட்டையை கட்டாயம் காட்ட வேண்டும்.

அதே நேரத்தில், புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் கீழ்க்கண்ட மாற்று ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தலாம்:

  • ஆதார் அட்டை
  • 100 நாள் வேலை திட்ட பணியாளர் அட்டை
  • அஞ்சல் அல்லது வங்கி கணக்குப் புத்தகம் (புகைப்படத்துடன்)
  • தொழிலாளர் நலத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு அட்டை
  • ஓட்டுநர் உரிமம்
  • பாஸ்போர்ட்
  • ஓய்வூதிய ஆவணம்
  • அரசு ஊழியர்களின் பணி அடையாள அட்டை

மேலும், வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் மற்றும் வரிசை எண்ணை தெரிந்துகொள்ள, “வாக்காளர் தகவல் சீட்டு” (Booth Slip) வழங்கப்படும். இதில் வாக்குச்சாவடி பெயர், வாக்குப் பதிவு நாள் மற்றும் நேரம் போன்ற விவரங்கள் இடம்பெறும்.

இந்த வாக்காளர் தகவல் சீட்டை, மாவட்ட தேர்தல் அலுவலர் வாக்குப்பதிவு நாளுக்கு 5 நாட்களுக்கு முன்பு அனைத்து வாக்காளர்களுக்கும் வழங்குவார். ஆனால், இந்த சீட்டு அடையாள ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்படாது என்பதும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

Related News

Latest News