Thursday, February 12, 2026

இனி இந்த சாலையில் கார் ஓட்டினால் பாட்டு கேட்கும்..!

இந்தியாவின் முதல் மெல்லிசை சாலை (Musical Road / Melody Road) மும்பையில் நரிமண் பாயிண்ட் முதல் வொர்லி வரை உள்ள கடற்கரை சாலையில் 2026 பிப்ரவரி 11ஆம் தேதி திறக்கப்பட்டுள்ளது.

சுமார் 500 மீட்டர் நீளமுடைய இந்த சாலை, வாகனங்கள் மணிக்கு 70 முதல் 80 கிலோமீட்டர் வேகத்தில் பயணம் செய்யும் போது, ஆஸ்கார் விருது பெற்ற ‘ஜெய் ஹோ’ பாடலின் இசையை ஒலிக்கச் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்காக ஹங்கேரிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு, சாலையின் மேற்பரப்பில் சிறப்பு பள்ளங்கள் மற்றும் ரம்பிள் பட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மராட்டிய மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சி, இந்தியாவில் முதன்முறையாக அமல்படுத்தப்பட்ட மெல்லிசை சாலை என்ற பெருமையை பெற்றுள்ளது. உலகளவில் அமைக்கப்பட்டுள்ள மெல்லிசை சாலைகளில் இது ஐந்தாவது என குறிப்பிடப்படுகிறது.

இந்த திட்டத்தை மகாராஷ்டிரா முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் துணை முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் திறந்து வைத்தனர். நிகழ்ச்சியில் ஹங்கேரி தூதர் பரன் ஜாரி, சிவசேனா முன்னாள் எம்.பி. ராகுல் செவாலே, மாநகராட்சி கூடுதல் கமிஷனர் அவினாஷ் தக்னே உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

சாலை மேற்பரப்பில் குறிப்பிட்ட இடைவெளியில் அமைக்கப்பட்டுள்ள ரம்பிள் பட்டைகள் மீது வாகனங்கள் செல்லும் போது, டயர்கள் மற்றும் சாலை இடையிலான உராய்வு காரணமாக இசை ஒலி உருவாகிறது. இதன் மூலம் ஓட்டுநர்களின் சலிப்பை குறைப்பதுடன், வேக வரம்பை கடைப்பிடிக்க ஊக்குவிப்பதும் முக்கிய நோக்கமாகும். மணிக்கு 70–80 கிலோமீட்டர் வேகத்தில் பயணம் செய்யும் போது மட்டுமே இந்த இசையை தெளிவாகக் கேட்க முடியும்.

உலகில் சில நாடுகளில் மட்டுமே இத்தகைய மெல்லிசை சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. 2007ஆம் ஆண்டு ஜப்பானில் முதன்முதலாக இந்த முயற்சி தொடங்கப்பட்டது. பின்னர் ஹங்கேரி, தென்கொரியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகளிலும் இத்தகைய சாலைகள் உருவாக்கப்பட்டன. தற்போது, இந்தியாவும் இந்த பட்டியலில் இணைந்துள்ளது.

Related News

Latest News