தாம்பரம் அருகே பள்ளி மாணவர்களை இறக்கிவிட்டு திரும்பிய மின் வேன் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை, தாம்பரம் அடுத்த சந்தோஷ்புரம் பகுதியை சேர்ந்தவர் சியோன் சாட்விக். தனியார் கல்லூரியில் பி.சி.ஏ படித்து வரும் இவர், பகுதி நேரமாக பள்ளி மாணவர்களை மினி வேனில் ஏற்றி செல்லும் வேலை செய்து வருகிறார். நேற்று வழக்கம்போல் மினி வேனில் பள்ளி மாணவர்களை அவர்களின் வீட்டில் இறக்கி விட்டு, பின்பு தனது வீட்டு வாசலில் வேனை நிறுத்தி வைத்துள்ளார்.
அப்போது திடீரென மின் வேன் தீப்பிடித்து எரிந்தது. இதனை கண்ட சியோன் சாட்விக் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த மேடவாக்கம் தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். இருப்பினும் வேன் முழுவதுமாக எரிந்து நாசமானது. மேலும், இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
