சுவீடன் நாட்டைச் சேர்ந்த வேதியியலாளர் மற்றும் டைனமைட் கண்டுபிடித்தவர் ஆல்ஃபிரட் நோபல். மனிதகுலத்திற்கு மிகப்பெரிய நன்மை செய்தவர்களை கௌரவிக்க வேண்டும் என்ற அவரது விருப்பப்படி, ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன.
இயற்பியல், வேதியியல், உடலியல் அல்லது மருத்துவம், இலக்கியம், அமைதி மற்றும் பொருளாதாரம் ஆகிய துறைகளில் சிறந்தவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இதில், அமைதிக்கான நோபல் பரிசை நார்வேயில் அமைந்துள்ள நோபல் கமிட்டி தேர்வு செய்து வழங்குகிறது. மற்ற பிரிவுகளுக்கான விருதுகள் ஸ்வீடனில் வழங்கப்படுகின்றன.
இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்காக மொத்தம் 338 பரிந்துரைகள் வந்தன. அதில் 244 பேர் தனிநபர்கள், 94 அமைப்புகள். முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட பலரும் பரிந்துரைக்கப்பட்டனர். இந்நிலையில், வெனிசுலா நாட்டைச் சேர்ந்த அரசியல் தலைவரான மரியா கொரினா மாசாதோ 2025ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றுள்ளார்.
நோபல் பரிசு பெற்றவருக்கு பணப் பரிசாக 11 மில்லியன் ஸ்வீடிஷ் குரோனர் வழங்கப்படுகிறது. இது அமெரிக்க டாலர் மதிப்பில் சுமார் 1.2 மில்லியன் டாலர்கள் ஆகும். இந்திய மதிப்பில் பார்க்கும்போது, இந்த பரிசுத்தொகை ரூ.10 கோடிக்கும் அதிகமாக இருக்கும்.
மனித குல அமைதி மற்றும் ஜனநாயகத்தை பாதுகாக்கும் பணியில் மரியா கொரினா மாசாதோவின் பங்களிப்பு உலகளவில் பாராட்டுக்குரியதாக கருதப்பட்டு, அவருக்கு இந்த உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.
