தென்னிந்தியாவின் போக்குவரத்து வரலாற்றில் ஒரு மாபெரும் புரட்சி ஏற்படப்போகிறது. ஹைதராபாத், அமராவதி மற்றும் சென்னை ஆகிய மூன்று முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் ஒரு பிரம்மாண்டமான புல்லட் ரயில் வழித்தடம் [High-speed rail corridor] அமையவுள்ளது.
மத்திய பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பு வெளியாகி, தற்போது அதற்கான முதற்கட்ட பணிகள் வேகமெடுத்துள்ளன. சுமார் 760 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த மெகா புராஜெக்ட், தென்னிந்தியாவின் பொருளாதார மற்றும் வணிக ரீதியான வளர்ச்சியில் ஒரு புதிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வழித்தடத்தில் மொத்தம் 18 ரயில் நிலையங்கள் [Stations] அமையவுள்ளன. மொத்தமுள்ள 760.09 கிலோமீட்டரில், ஆந்திரப் பிரதேசம் 518.54 கிலோமீட்டருடன் முதன்மையான இடத்தைப் பிடித்துள்ளது.
அதைத் தொடர்ந்து தெலுங்கானாவில் 180.32 கிலோமீட்டரும், தமிழ்நாட்டில் 61.23 கிலோமீட்டரும் இந்த அதிவேக ரயில் பாதை அமையவுள்ளது. குறிப்பாக, ஆந்திராவின் புதிய தலைநகரான அமராவதிக்கு இந்த ரயில் திட்டம் மிகப்பெரிய உந்துசக்தியாக இருக்கும்.
ஆரம்பத்தில் இந்தத் திட்டம் அமராவதியைத் தவிர்க்கலாம் என்று கருதப்பட்ட நிலையில், ஆந்திர அரசின் கோரிக்கையை ஏற்று இப்போது அமராவதி மற்றும் குண்டூர் வழியாகவே இந்த புல்லட் ரயில் செல்லவுள்ளது.
தெலுங்கானாவில் ஹைதராபாத், ஷம்ஷாபாத், பாரத் சிட்டி/பியூச்சர் சிட்டி, டிரை போர்ட் [Dry Port], ஹாலியா மற்றும் வடபள்ளி ஆகிய இடங்களில் ஸ்டேஷன்கள் அமையும்.
ஆந்திராவில் தச்சேபள்ளி, அமராவதி, குண்டூர், சீராலா, ஒங்கோல், காவலி, நெல்லூர், கூடூர் மற்றும் திருப்பதி ஆகிய முக்கிய நகரங்களை இந்த ரயில் இணைக்கும்.
தமிழகத்தில் திருவள்ளூர், சென்னை வெளிவட்டச் சாலை [Chennai Outer Ring Road] மற்றும் சென்னை சென்ட்ரல் [Chennai Central] ஆகிய 3 இடங்களில் ரயில் நிலையங்கள் அமையத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த புல்லட் ரயிலின் மிக முக்கியமான சிறப்பம்சம் என்னவென்றால், தற்போது சாதாரண ரயில்களில் 12 மணிநேரம் ஆகும் பயணத்தை வெறும் 2 மணிநேரம் 20 நிமிடங்களாக இது குறைக்கும்.
இந்த அசாத்திய வேகம், மூன்று மாநிலங்களுக்கு இடையிலான தொழில்துறை மற்றும் பொருளாதாரத் தொடர்புகளை வலுப்படுத்தும். குறிப்பாக ரயில் நிலையங்கள் அமையும் பகுதிகளில் ரியல் எஸ்டேட் [Real Estate], ஹோட்டல் துறை மற்றும் லாஜிஸ்டிக்ஸ் [Logistics] பிரிவுகளில் இது பெரும் மாற்றங்களைக் கொண்டுவரும்.
தற்போது தேசிய அதிவேக ரயில் கழகம் [NHSRCL] இதற்கான விரிவான திட்ட அறிக்கையை [Detailed Project Report – DPR] தயார் செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளது.
நிலம் கையகப்படுத்துதல் மற்றும் நிதி ஒதுக்கீடு போன்ற பணிகள் இறுதி செய்யப்பட்டவுடன், தென்னிந்தியாவின் இந்த அதிவேகப் பயணம் ஒரு புதிய வரலாற்றைப் படைக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.
