கடந்த மே மாதம் சென்னை அடுத்த காட்டாங்கொளத்தூரில் சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக மதுரை ஆதீனம் மே 2 ம் தேதி மதுரையில் இருந்து காரில் புறப்பட்டார். அப்போது உளுந்தூர்பேட்டை அருகே கார் விபத்தில் சிக்கியது. விபத்தின் மூலம் தன்னைக் கொல்லை பாகிஸ்தான் சதி செய்வதாகவும், விபத்து ஏற்படுத்திய காரில் இருந்த நபர்கள் தாடி வைத்திருந்ததாகவும், குல்லா அணிந்திருந்ததாகவும் குற்றம்சாட்டினார்.
இது தொடர்பாக மதுரை ஆதீனம் கார் ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து மதக்கலவரத்தை தூண்டும் விதமாக பேசியதாக மதுரை ஆதீனம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் முன் ஜாமீன் கோரி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மதுரை ஆதீனம் இன்று மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனு வரும் ஜூலை 14ஆம் தேதி விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.