கருப்பு பணத்தை ஒழிக்கும் நோக்கில் கடந்த 2016ம் ஆண்டு, பழைய 500 ரூபாய் நோட்டுகளை தடை செய்து, புதிய 500 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு அறிமுகம் செய்தது. அத்துடன் 2000 ரூபாய் நோட்டும் அறிமுகம் செய்யப்பட்டு, சந்தைக்கு வந்தன. என்றாலும் 2 ஆண்டுகளுக்கு முன்பு 2000 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு திரும்ப பெற்றுக் கொண்டது.
இதனால் 100, 200, 500 ரூபாய் நோட்டுகள் மட்டுமே, தற்போது அதிகம் புழக்கத்தில் உள்ளன. இந்தநிலையில் வருகின்ற 2026ம் ஆண்டு மார்ச் முதல், 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வேகமாகப் பரவி வருகிறது.
இதைப்பார்த்த பலரும் 2000 ரூபாய் போல, 500 ரூபாய் நோட்டையும் அரசு திரும்ப பெற்றுக்கொள்ள போகிறதா? என்று கேள்வி எழுப்பி வந்தனர். இதையடுத்து மத்திய அரசின் உண்மை சரிபார்ப்பு நிறுவனமான Press Information Bureau, தனது சமூக வலைதள பக்கத்தில் இதற்கு விளக்கம் அளித்துள்ளது.
அதில், ” 500 ரூபாய் நோட்டுகள் ரத்து செய்யப்படவில்லை. அவை சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும். இதுபோன்ற செய்திகளை பகிர்வதற்கு அல்லது நம்புவதற்கு முன், அரசின் அதிகாரப்பூர்வ ஆதாரங்களை சரி பார்க்கவும், ” என்று விளக்கம் அளித்துள்ளது.
இதைப்பார்த்த பலரும், ”பொதுமக்களை அச்சுறுத்தும் நோக்கில் இதுபோன்ற தவறான தகவல்களை பரப்புவோருக்கு, தகுந்த தண்டனை வழங்க வேண்டும்,” என்று சமூக வலைதளங்கள் வழியாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.