சமீபமாக சமூக ஊடகங்களில் ஒரு வதந்தி பரவி வருகிறது – ரூ.500 நோட்டு தடை செய்யப்படும் என. இது உண்மையா? ₹2000 நோட்டுப் போலவே புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்படுமா? என்ற குழப்பம் இப்போது எல்லோரிடத்திலும் நிலவி வருகிறது.
முதலில்… இதைப் பற்றிய உண்மை என்ன? ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் ₹500 நோட்டை தடை செய்ய எந்தவொரு அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை. அதாவது ₹500 நோட்டு முற்றிலும் செல்லுபடியாகும். இது சட்டபூர்வமாக புழக்கத்தில் தொடரும்.
ஆனால் ஏன் இந்த வதந்தி பரவுகிறது? என்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது… சந்தையில் போலி ₹500 நோட்டுகள் அதிகமாகக் காணப்படுகிறது. இதனால் மக்கள் குழப்பம் அடைவதும், சிலர் உண்மையான நோட்டுகளையும் சந்தேகிக்கத் தொடங்கிவிட்டனர். இதை சமாளிக்க, அரசு மற்றும் ரிசர்வ் வங்கி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.
இதில் மற்றொரு முக்கியமான விவரம் என்னவென்றால்… ரிசர்வ் வங்கி சமீபத்தில் ஒரு புதிய உத்தரவை அனைத்து வங்கிகளுக்கும் மற்றும் ஏடிஎம் நிறுவனங்களுக்கும் வழங்கியுள்ளது. இதன்படி, ஏடிஎம்களில் ₹100 மற்றும் ₹200 மதிப்புள்ள நோட்டுகள் இருக்க வேண்டும் என்பதைக் கட்டாயமாக்கியுள்ளது. ஏன் தெரியுமா? ஏனெனில் பல ஏடிஎம்கள் ₹500 நோட்டுகளை மட்டுமே வெளியிட்டு, மக்கள் சில்லறை பெற முடியாமல் அவதிப்பட்டனர்.
ரிசர்வ் வங்கி இதை உணர்ந்து, செப்டம்பர் 30க்குள், நாடு முழுவதும் உள்ள ஏடிஎம்களில் குறைந்தது 75% இடங்களில் ₹100 மற்றும் ₹200 நோட்டுகள் இருக்கவேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
இதன் நோக்கம்… மக்கள் சிரமமின்றி பரிவர்த்தனைகளை செய்யவும், சில்லறை நாணயங்களின் பற்றாக்குறை குறையவும் செய்வதுதான். இதில் ₹500 நோட்டுக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை.
ஆகவே, கவலைப்பட வேண்டாம். ₹500 நோட்டு தடை செய்யப்படவில்லை. இது ஒரு வதந்தி மட்டுமே. உண்மையை அறிந்து செயல்படுங்கள். சந்தேகங்கள் இருந்தால், உங்கள் வங்கியை தொடர்பு கொள்ளுங்கள்.