பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் மோடி அரசின் தோல்வியே காரணம் என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் : காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காம் என்ற இடத்தில் பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகள் மீது திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்துள்ளனர். இக்கொடூரச் செயலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.
இந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரழந்தவர்களின் குடும்பத்திற்கு உரிய இழப்பீட்டை ஒன்றிய அரசு வழங்கிட வேண்டும். காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சைக்குத் தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும் ஒன்றிய அரசு செய்து கொடுத்திட வேண்டும்.
இந்திய அரசின் உளவுத்துறை மோடி ஆட்சியில் செயலிழந்து விட்டது. இக்கொடூர நிகழ்விற்கு ஜம்மு – காஷ்மீர் தொடர்பான ஒன்றிய அரசின் தவறான கொள்கையும், செயல்பாடுகளுமே அடிப்படைக் காரணம். இப்பயங்கரவாத தாக்குதலுக்கு ஒன்றிய அரசு தார்மீக பொறுப்பேற்க வேண்டும் என கூறியுள்ளார்.