Sunday, December 14, 2025

ஆட்டுக்கு அப்பா யார்? சோதனை செய்ய உத்தரவிடுங்க மை லார்டு

ஆட்டுக்கு மகப்பேறு சோதனை செய்து அதன் டிஎன்ஏவைக் கண்டுபிடிக்க உத்தரவிடக்கோரி வழக்குத் தொடர்ந்துள்ளார் ஒரு பெண்.

அமெரிக்காவிலுள்ள ஃபுளோரிடா மாகாணத்தைச் சேர்ந்தவர் கிறிஸ் ஹெட்ஸ்ட்ரோம். இந்தப் பெண்மணி தனது அண்டைவீட்டாரான ஹீதர் டேனரிடமிருந்து பெல்லா, ஜிகி, ரோஸி, செல்டா மற்றும் மார்கோடா ஆகிய 5 நைஜீரிய ஆடுகளை 900 டாலர்களுக்கு வாங்கினார்.

அந்நாட்டில் பதிவுசெய்யப்பட்ட ஆடுகளுக்கு விலை மதிப்பு அதிகம் என்பதால், அவற்றை ஆட்டுப் பால் பண்ணைச் சங்கத்தில் பதிவுசெய்ய விண்ணப்பித்தார்.

ஆனால், அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தனது ஆடுகளுக்கு மரபணு பரிசோதனை செய்ய உத்தரவிடுங்கள் அல்லது பணத்தைத் திரும்பத் தரச்சொல்லுங்கள் என்று நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

இதுபற்றி விளக்கமளித்துள்ள ஹீதர், தான் 10 ஆண்டுகளாக அந்த ஆட்டுப் பண்ணைக்கு ஆடுகளை விற்பனை செய்து வருவதாகவும், தற்போது விற்பனை செய்துள்ள ஆடுகளை ஈன்ற தந்தை ஆட்டையும் பதிவுசெய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

எனினும், ஆடுகளை வாங்கிய கிறிஸ் ஹெட்ஸ்ரோம் அந்த ஆட்டுப் பண்ணையில் உறுப்பினர் ஆக இல்லாததால், அவரது விண்ணப்பம் பதிவுசெய்யப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

ஆடுகளின் தந்தை யார் என்று கண்டுபிடிப்பதற்குத் தந்தை ஆட்டின் 40 ரோமங்கள் தேவைப்படும். இதுபற்றி ஹீதருக்கு கடிதம் எழுதினார் அந்தப் பெண்மணி.
அதைத் தொடர்ந்து அவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது.

ஹீதரின் ஆட்டுப் பண்ணைக்கு அந்தப் பெண்மணி மூன்றுமுறை சென்றதாகவும் போலீசையும் அழைத்ததாகவும், ஆடுகளுக்குரிய தொகை, நீதிமன்றச் செல்வு, வழக்கறிஞர் கட்டணம் ஆகியவற்றைத் தரவேண்டும் அல்லது ஆடுகளின் பரம்பரைத் தன்மையை டிஎன்ஏ சோதனைமூலம் உறுதிப்படுத்த வேண்டும் என்றும்கூறி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார் அந்தப் பெண்மணி.

2020 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. ஆனாலும், வழக்குத் தொடர்ந்த அந்தப் பெண்மணியின் புகைப்படமோ, ஆடுகளை விற்றவரின் புகைப்படமோ வெளியாகவில்லை.

Related News

Latest News