கட்டணத்தை உயர்த்திய  ஓலா மற்றும்  உபர் 

237
Advertisement

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் உணவு பொருட்கள் முதல் உற்பத்தி பொருட்களின் விலை அதிகரித்துள்ளது.கடந்த ஒரு மாதமாகவே இந்தியாவின் முன்னணி ஆன்லைன் டாக்ஸி சேவை நிறுவனங்கள் எரிபொருள் விலை உயர்வால் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது.இந்நிலையில் ஓலா மற்றும் உபர் நிறுவனங்கள் கட்டணத்தை அதிகரித்துள்ளது.

 ஓலா, உபர் நிறுவனங்களை சேர்ந்த ஓட்டுனர்கள்,  தங்களுக்குக் கிடைக்கும் டிரிப்களை ரத்து செய்து விட்டு, அதே வாடிக்கையாளர்களுக்கு டாக்ஸி சேவை அளிக்கின்றனர் .இதனால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.இன்னும் சில ஓலா, உபர் ஓட்டுநர்கள் பயணக் கட்டணத்தைத் தாண்டி 50 ரூபாய் முதல் 100 ரூபாய் வரையில் கூடுதலாகக் கொடுத்தால் தான் சேவை அளிப்பதாகவும் கூறினர். 

இத்தகைய பிரச்சனை பெரும்பாலான நகரங்களில் இருந்தது, இதனால் ஓலா, உபர் அதிகளவிலான வர்த்தகத்தை இழந்தது மட்டும் அல்லாமல் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை இழந்தது.

இந்த நிலையைச் சமாளிக்க வேண்டும் என்பதற்காக டாக்ஸி ஓட்டுநர்களிடம் ஆலோசனை செய்த பின்பு கட்டணத்தை உயர்த்தி, ஓட்டுநர்களுக்கு எரிபொருள் விலை உயர்வின் மூலம் ஏற்பட்ட பாதிப்பைக் குறைக்க முன்வந்துள்ளது. இதன் படி நாட்டின் முன்னணி நகரங்களில் ஓலா, உபர் தனது டாக்சி கட்டணத்தை உயர்த்தியுள்ளது

உபர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாட்டின் பெரும்பாலான இடத்தில் எரிபொருள் விலை 100 ரூபாயைத் தாண்டிய நிலையில் டெல்லி- என்சிஆர், கொல்கத்தா பகுதியில் டாக்ஸி கட்டணத்தை 12 சதவீதமும், மும்பை, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் 15 சதவீதமும் விலை உயர்த்தப்பட்டு உள்ளது.

இதனை தொடர்ந்து, மற்ற முக்கிய நகரங்களிலும் டாக்ஸி கட்டணம் உயரும் என தெரிகிறது.