Tuesday, June 24, 2025

சக்கரை நோயாளிகள் எந்த பழங்களை சாப்பிடலாம்/சாப்பிடக்கூடாது?

சக்கரை நோய் வந்துவிட்டாலே எதை சாப்பிடுவது, எதை தவிர்ப்பது என்ற குழப்பமே பலருக்கும் வாழ்க்கைமுறையாக மாறிவிடுகிறது.

அதிலும், பழங்களை சாப்பிடலாமா கூடாதா என்ற தீராத கேள்விக்கு தீர்வாக அமைவது தான் கிளைசமிக் இன்டெக்ஸ் (Glycemic Index) என்னும் சக்கரை அளவுக்கான சர்வதேச  குறியீடு பட்டியல்.

ஒன்றில் இருந்து நூறு புள்ளிகள் வரை உள்ள இந்த குறியீட்டில் ஒவ்வொரு உணவின் ரத்த சக்கரை அளவை அதிகரிக்கும் தன்மைக்கு ஏற்ப, புள்ளிகள் வழங்கப்படுகின்றன.

அதாவது, இந்த பட்டியலில் அதிக புள்ளிகளை பெற்றுள்ள பழங்கள் சக்கரை நோயாளிகளுக்கு ஆபத்தானவை. அதே நேரம், குறைந்த புள்ளிகளை பெற்றுள்ள பழங்கள் பாதுகாப்பானவையாக கருதப்படுகிறது.

அதன்படி ஆப்பிள், அவோகேடோ, blackberry, செர்ரி, திராட்சை, பீச், பேரிக்காய், பிளம் மற்றும் ஸ்ட்ராபெர்ரி  வகை பழங்கள் 20இல் இருந்து 49 வரை GI புள்ளிகளை கொண்டிருப்பதால் உடனடியாக ரத்தத்தில் உள்ள சக்கரையின் அளவை அதிகப்படுத்தாது.

அத்தி, கிவி, மாம்பழம் மற்றும் ஆரஞ்சுகள் 50இல் இருந்து 69 GI புள்ளிகளை கொண்டிருப்பதால், சக்கரை நோயாளிகள் இந்த பழங்களை மிக குறைவாக எடுத்து கொள்ள வேண்டும்.

நன்கு பழுத்த வாழைப்பழம், உலர்ந்த பேரீச்சம்பழம், தர்பூசணி மற்றும் அன்னாசி பழங்கள் அதிகபட்ச GI புள்ளிகளை கொண்டிருப்பதால் இவற்றை சக்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டும்.

நம் உடல் இயல்பாக இயங்குவதற்கும் மேம்பட்ட ஆரோக்கியத்திற்கும் தேவையான விட்டமின்ஸ், மினெரல்ஸ் மற்றும் ஆண்டி ஆக்சிடன்ட்ஸ் பழங்களில் அதிக அளவில் உள்ளது. அதனால், அவற்றை முற்றிலும் தவிர்க்காமல், சரியான நேரத்தில், சரியான அளவில் சாப்பிடுவது சிறப்பான பலன்களை தரும் என உணவியல் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news