முதல்வர் விஜய் ஆட்சியில் ‘லஞ்சம்’? போலீசாருக்கு ஆப்பு வைத்த ‘அமல்ராஜ்’!

சென்னை காவல்துறையில் லஞ்சத்தை ஒழிக்க எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை, இப்போது ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

காவல்துறை ஆணையர் அமல்ராஜ் அவர்களின் அதிரடி உத்தரவின் பேரில், சென்னை காவல்துறையினரை கண்காணிப்பதற்கென்றே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு, தனது முதல் வேட்டையை வெற்றிகரமாகத் தொடங்கியுள்ளது.

வெறும் ஐந்நூறு ரூபாய் லஞ்சம் கேட்ட போக்குவரத்து உதவி ஆய்வாளர் மீது எடுக்கப்பட்ட இந்த அதிரடி நடவடிக்கை, தவறான வழியில் செல்லும் மற்ற அதிகாரிகளுக்கு ஒரு பலமான எச்சரிக்கையாக அமைந்துள்ளது.

சென்னை சிந்தாதிரிப்பேட்டை போக்குவரத்து காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த உதவி ஆய்வாளர் செல்வராஜ் என்பவர், விதிமீறலுக்காக பறிமுதல் செய்யப்பட்ட ஒரு இருசக்கர வாகனத்தை மீண்டும் ஒப்படைக்க, அதன் உரிமையாளரிடம் 500 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.

இது குறித்த தகவல், புதிய லஞ்ச ஒழிப்புப் பிரிவின் கவனத்திற்குச் சென்றது. கூடுதல் துணை ஆணையர் குமரகுருபரன் தலைமையிலான குழுவினர் இது குறித்து தீவிர விசாரணை நடத்தியதில், லஞ்சம் கேட்டது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து, எஸ்.ஐ செல்வராஜ் உடனடியாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு, தற்போது ஆயுதப்படை பிரிவிற்கு தூக்கியடிக்கப்பட்டுள்ளார்.

இனி அவர் எக்காலத்திலும் வேறு முக்கிய பிரிவுகளுக்குச் செல்ல முடியாத அளவிற்கு அவர் மீது கடுமையான துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய லஞ்ச ஒழிப்புப் பிரிவு தொடங்கப்பட்டு ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், பொதுமக்களிடமிருந்து புகார்கள் குவியத் தொடங்கியுள்ளன.

78717 23000 என்ற பிரத்யேக செல்போன் எண்ணிற்கு வாட்ஸ்அப் மற்றும் நேரடி அழைப்புகள் மூலம் இதுவரை 20-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளதாகத் தெரிகிறது.

குறிப்பாக, வியாபாரிகளிடம் மாமூல் வசூலிப்பது, உணவகங்களில் இலவசமாக உணவு கேட்பது போன்ற புகார்களும் இதில் அடங்கும்.

தற்போது இந்த புகார்களின் அடிப்படையில் மேலும் மூன்று உதவி ஆய்வாளர்கள் தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

சிறு தொகையாக இருந்தாலும், லஞ்சத்தில் ஈடுபடும் காவலர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என காவல்துறை தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

பெரிய அளவிலான லஞ்சப் புகார்களில் சிக்கினால், பணி இடமாற்றம் மட்டுமல்லாது, தற்காலிக பணிநீக்கம் மற்றும் கைது நடவடிக்கைகள் போன்ற கடுமையான தண்டனைகள் காத்திருப்பதாக லஞ்ச ஒழிப்புப் பிரிவு எச்சரித்துள்ளது.

காவல்துறையினரின் இந்த வெளிப்படையான அதிரடி நடவடிக்கைகள், பொதுமக்கள் மத்தியில் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

Related News

Latest News