யாஷ் நடிக்கும் “டாக்ஸிக்” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எப்போது தெரியுமா?

நடிகர் யாஷ் நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘டாக்ஸிக்: எ ஃபேரிடேல் ஃபார் க்ரோனப்ஸ்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி இறுதியாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர்கள் வெளியிட்ட தகவலின்படி, இப்படம் வரும் ஆகஸ்ட் 26ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு 2024 அக்டோபரில் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் இப்படம் 2025 ஏப்ரல் 10ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், படப்பிடிப்பு மற்றும் தயாரிப்பு பணிகளில் ஏற்பட்ட தாமதங்களின் காரணமாக வெளியீடு கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், ஈத் மற்றும் உகாதி பண்டிகைகளை முன்னிட்டு மார்ச் 19ஆம் தேதி புதிய வெளியீட்டு தேதியாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வளைகுடா பகுதியில் நிலவிய பதற்றம் காரணமாக, திரைப்படம் மீண்டும் மார்ச் 19ஆம் தேதியிலிருந்து ஜூன் 4ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. அதுவும் இறுதியில் நடைபெறாத நிலையில், தற்போது ஆகஸ்ட் 26ஆம் தேதி உறுதியாக வெளியிடப்படும் என தயாரிப்பு குழு அறிவித்துள்ளது.

‘டாக்ஸிக்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட உள்ளது. இப்படத்தை இயக்கியவர் கீது மோகன்தாஸ். இப்படத்தில் நயன்தாரா, ஹுமா குரேஷி, கியாரா அத்வானி, தாரா சுதாரியா, ருக்மணி வசந்த் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

உலகளவில் தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், நடிகர் யாஷ் தனது எக்ஸ் தளத்தில் இப்படத்தின் புதிய வெளியீட்டு தேதியை பகிர்ந்து ரசிகர்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார். நீண்ட தாமதங்களுக்கு பிறகு படம் இறுதியாக திரைக்கு வர இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

Related News

Latest News