தேர்தல் நேரம்; சொந்த ஊர்களுக்கு செல்ல 1.10 லட்சம் பேர் முன்பதிவு…

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில், வாக்காளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க வசதியாக அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, இன்று முதல் மூன்று நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. குறிப்பாக, சென்னை உள்ளிட்ட நகரங்களில் தங்கி வேலை மற்றும் தொழில் செய்து வரும் மக்கள் தங்கள் ஊர்களுக்கு எளிதில் செல்லும் வகையில் இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து மொத்தம் 5,574 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன் கூடுதலாக இன்று மட்டும் 1,404 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகள் கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம் போன்ற முக்கிய பேருந்து நிலையங்களில் இருந்து புறப்படுகின்றன. மேலும், நாளை (22ஆம் தேதி) 3,570 சிறப்பு பேருந்துகளும், தேர்தல் தினத்துக்கு முந்தைய நாள் மதியம் 1 மணி வரை மேலும் 600 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.

இந்த சேவைக்கான முன்பதிவு கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது. இதுவரை சுமார் 1,10,000 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். இதில் இன்று பயணம் செய்ய 40,000 பேரும், நாளை பயணம் செய்ய 70,000 பேரும் முன்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நீண்ட தூர பயணங்களுக்கு அரசு விரைவு பேருந்துகள் மற்றும் பிற போக்குவரத்து கழக சேவைகளுக்கும் முன்பதிவு வசதி வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் சிரமமின்றி பயணம் செய்ய முன்கூட்டியே டிக்கெட் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Related News

Latest News