அமலாகும் தேர்தல் நடத்தை விதிகள் : முக்கிய அம்சங்கள் என்னென்ன?

தேர்தல் நடத்தை விதிகள் (Model Code of Conduct) என்பது தேர்தல் ஆணையத்தால் தேர்தலை சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடத்த அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுக்காக வகுக்கப்படும் வழிகாட்டுதல்கள் ஆகும். தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் நடைமுறைக்கு வரும் இந்த விதிகள், அரசு அதிகாரம் மற்றும் பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுத்து, அனைத்து வேட்பாளர்களுக்கும் சமமான வாய்ப்பை உறுதி செய்கின்றன.

தேர்தல் நடத்தை விதிகளின் முக்கிய அம்சங்கள்:

அரசு அதிகார துஷ்பிரயோகம் தடுப்பு: ஆளுங்கட்சியினர் அரசு இயந்திரம், அரசு வாகனங்கள், விமானங்கள் அல்லது அரசுப் பணிகளை தேர்தல் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தக் கூடாது.

திட்டங்கள் அறிவித்தல்: தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட பிறகு, புதிய திட்டங்கள், அடிக்கல் நாட்டு விழாக்கள், நிதி ஒதுக்கீடு அல்லது அரசு நிதியில் புதிய சலுகைகள் அறிவிக்கப்படக் கூடாது.

பிரச்சாரக் கட்டுப்பாடுகள்: வழிபாட்டுத் தலங்களை பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தக் கூடாது. சாதி, மத உணர்வுகளைத் தூண்டி வாக்குக் கேட்கக் கூடாது.

பொதுக்கூட்டங்கள் & ஊர்வலங்கள்: ஊர்வலங்களுக்கு முன்கூட்டியே காவல்துறையிடம் அனுமதி பெற வேண்டும். ஒலியழுத்தக் கட்டுப்பாடுகள் மற்றும் நேரக் கட்டுப்பாடுகளைப் பின்பற்ற வேண்டும்.

பணம் மற்றும் பரிசுப் பொருட்கள்: வாக்காளர்களுக்குப் பணமோ, பரிசுப் பொருட்களோ, மதுபானமோ வழங்கக் கூடாது.

சுவரொட்டிகள்: தனியார் இடங்களில் அனுமதி இல்லாமல் கொடிகள், சுவரொட்டிகள் ஒட்டக்கூடாது.

விதிமீறல் நடவடிக்கை: இந்த விதிகளை மீறும் வேட்பாளர்கள் அல்லது கட்சிகள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க முடியும். புகார்களின் அடிப்படையில் தேர்தல் பிரச்சாரம் செய்ய தடை, வேட்புமனு நிராகரிப்பு அல்லது சட்ட நடவடிக்கை வரை எடுக்க வழிவகை உள்ளது.

Related News

Latest News