தமிழக அரசியலில் மீண்டும் ஒரு பெரிய புயல் வீசத் தொடங்கியுள்ளது! மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளான நேற்று, சசிகலா ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட தனது புதிய கட்சியைத் தொடங்குவதாக அறிவித்த அவர், கட்சிக்கான புதிய கொடியையும் அறிமுகப்படுத்தினார். அந்தக் கொடியில் அண்ணா, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகிய மூவரின் படங்களும் இடம்பெற்றுள்ளன. சிவப்பு, வெள்ளை, கருப்பு நிறங்களில் அந்தக் கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேடையில் பேசிய சசிகலா, ஜெயலலிதா இறந்த அந்த இரவு நடந்த சம்பவங்களை உருக்கமாகப் பகிர்ந்து கொண்டார். “ஜெயலலிதா இறந்த அன்றிரவு, அனைத்து அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் என்னிடம் வந்து, ‘நீங்களே முதல்வராகப் பொறுப்பேற்க வேண்டும்’ என்று கெஞ்சினார்கள். ஆனால் நான் தான் மறுத்தேன். நான் அரசியலை விட, என் அக்காவிற்கு செய்ய வேண்டிய இறுதிச் சடங்குகளே முக்கியம் என்று நினைத்தேன்” என்று பழைய நினைவுகளைக் கிளறினார்.
ஓபிஎஸ் முதல்வராகத் தொடரட்டும் என்று தானே வழிவிட்டதாகக் கூறிய அவர், எடப்பாடி பழனிசாமி தனக்குச் செய்த துரோகத்தைச் மறைமுகமாகச் சாடினார்.
எம்ஜிஆர் இறந்த போது ஜெயலலிதா எப்படி அவமானப்படுத்தப்பட்டாரோ, அதே நிலை தனக்கும் ஏற்பட்டிருப்பதாகக் கண்ணீர் மல்கக் கூறினார். “அன்று ஜெயலலிதாவை அரசியலை விட்டே விரட்ட நினைத்தார்கள். ஆனால் அவர் எதிர்த்துப் போராடி எதிர்க்கட்சித் தலைவரானார். அதேபோல நானும் போராடுவேன்” என்று சசிகலா சூளுரைத்தார்.
விரைவில் கட்சியின் பெயர் அறிவிக்கப்படும் என்று கூறிய அவர், “இது ஒரு திராவிடக் கட்சி. எளிய மக்களுக்கான கட்சி. துரோகிகளை வேரறுக்கும் கட்சி” என்று ஆவேசமாகப் பேசினார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்றதால் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை இருந்தாலும், தனது அரசியல் பயணம் இன்னும் முடியவில்லை என்பதை ஆணித்தரமாக நிரூபித்துள்ளார் சசிகலா.
அதிமுகவில் ஏற்கனவே ஓபிஎஸ் – இபிஎஸ் மோதல் உச்சத்தில் இருக்கும் நிலையில், சசிகலாவின் இந்த புதிய அவதாரம் எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு மிகப்பெரிய சவாலாக அமையுமா? பொறுத்திருந்து பார்ப்போம்!
