எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெறும் பராமரிப்பு பணி காரணமாக கடற்கரை – செங்கல்பட்டு தடத்தில் 44 மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், பயணிகள் 2-வது நாளாக நேற்றும் அவதியடைந்தனர்.
எழும்பூர் ரயில் நிலையத்தில் 10, 11 ஆகிய நடைமேடைகளில் சீரமைப்பு மற்றும் நடைமேம்பாலப் பணிகள் நடைபெறுகின்றன. இதனால், கடற்கரை- செங்கல்பட்டு வழித்தடத்தில் ஏப்.5-ம் தேதி வரை 44 மின்சார ரயில்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், 2-வது நாளான நேற்றும் பயணிகள் கடும் அவதியடைந்தனர். ரயில் தாமதம் காரணமாக, மின்சார ரயில்களில் எழும்பூர் நிலையம் வந்து, விரைவு ரயிலைப் பிடிக்க வந்தவர்களில் பலர் ரயிலைத் தவறவிட்டனர். ஏற்கெனவே குறிப்பிட்டிருந்த அட்டவணைப்படி மின்சார ரயில்கள் இயக்கப்படாததால், பயணிகள் பல மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
