Wednesday, February 4, 2026

நடுரோட்டில் பேருந்தை மறைத்து ஓட்டுநரை தாக்கிய கும்பல்

திண்டுக்கல் மாவட்டம், சித்தையன் கோட்டையிலிருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற தனியார் பேருந்து, கடந்த 30ஆம் தேதி மாலை சுமார் 5 மணியளவில் ஓட்டுநர் விஜயகுமார் மற்றும் நடத்துனர் சென்றாய பெருமாள் ஆகியோரால் இயக்கப்பட்டு வந்தது. அந்த பேருந்து வத்தலகுண்டு பைபாஸ் சாலையில் உள்ள குட்டியபட்டி பிரிவு அருகே வந்த போது, அங்கு ஒரு கும்பல் பேருந்தை வழிமறித்தது.

அந்த கும்பல் பேருந்துக்குள் நுழைந்து, பொதுமக்கள் முன்னிலையில் நடத்துனர் சென்றாய பெருமாளை கொலை வெறியுடன் தாக்கியது. இந்த தாக்குதலை தடுக்க முயன்ற ஓட்டுநர் விஜயகுமாருக்கும், பேருந்தில் பயணம் செய்த சில பொதுமக்களுக்கும் காயம் ஏற்பட்டது.

இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், போலீசார் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் தாக்குதல் நடத்திய கும்பல் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டது. இதில் படுகாயம் அடைந்த நடத்துனர் சென்றாய பெருமாள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தனியார் பேருந்து நடத்துனர் மீது ஏன் இத்தகைய கொலை வெறித் தாக்குதல் நடத்தப்பட்டது, தாக்குதலுக்கு காரணமானவர்கள் யார் என்பது குறித்து இதுவரை எந்த தெளிவான தகவலும் வெளியாகவில்லை. மேலும், சம்பவம் நடந்த நாளிலிருந்து தற்போது வரை குற்றவாளிகள் கைது செய்யப்படாத நிலையில், சட்டம் மற்றும் ஒழுங்கு நிலை குறித்து பேருந்து பயணிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.

பொதுமக்கள் முன்னிலையில் பேருந்தை வழிமறித்து நடத்துனரை தாக்கிய அந்த கும்பலின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related News

Latest News