Sunday, January 25, 2026

தூங்கிக் கொண்டிருந்த கணவரை கழுத்தை நெரித்து கொன்ற மனைவி

ஆந்திர மாநிலம் ஏலூரு மாவட்டத்தை சேர்ந்தவர் சுதீர் ரெட்டி (வயது 44). இவரது மனைவி ஞான பிரசன்னா (வயது 40). சுதீர் ரெட்டி தனது குடும்பத்தினருடன் ஐதராபாத் குகட் பள்ளி விவேகானந்தா நகரில் வசித்து வந்தார். ஞான பிரசன்னா தனியார் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் மேனேஜராக பணியாற்றி வந்தார்.

கணவன்–மனைவி இருவருக்கும் ஒருவரையொருவர் மீதான சந்தேகம் காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது. குறிப்பாக சுதீர் ரெட்டி தினமும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து, மனைவியை அடித்து உதைத்து கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஞான பிரசன்னாவுக்கு கணவர் மீது கடும் கோபம் ஏற்பட்டது.

சம்பவத்தன்று இரவு மது போதையில் வீட்டிற்கு வந்த சுதீர் ரெட்டி, படுக்கையறையில் இருந்த ஞான பிரசன்னாவிடம் அவரது நடத்தையில் சந்தேகம் இருப்பதாக கூறி கடுமையாக சண்டை போட்டார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது. பின்னர் சுதீர் ரெட்டி படுக்கையறையில் தூங்கச் சென்றார்.

அப்போது வீட்டில் இருந்த கயிறை எடுத்த ஞான பிரசன்னா, தூங்கிக் கொண்டிருந்த கணவரின் கழுத்தை இறுக்கி கொலை செய்தார். பின்னர் அவரது உடலை படுக்கையிலிருந்து கீழே தள்ளினார். இதனால் உடலில் காயங்கள் ஏற்பட்டன.

அடுத்த நாள் காலை, ஞான பிரசன்னா உறவினர்களுக்கு தொலைபேசி செய்து, கணவர் மது போதையில் படுக்கையிலிருந்து கீழே விழுந்து இறந்துவிட்டதாக கூறி நம்ப வைத்தார். ஆனால் சுதீர் ரெட்டியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது சகோதரி போலீசில் புகார் அளித்தார்.

இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பிரேத பரிசோதனை அறிக்கையில், சுதீர் ரெட்டி கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டிருப்பது உறுதியானது. இதனைத் தொடர்ந்து போலீசார் ஞான பிரசன்னாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related News

Latest News