நவீன யுகத்தில் நாம் பயணித்துக் கொண்டிருந்தாலும், தமிழகத்தின் ஒரு பகுதியில் 19 மனித உயிர்கள் கடந்த 8 ஆண்டுகளாக நரக வாழ்க்கையை வாழ்ந்து வந்த அதிர்ச்சித் தகவல் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள சிறுமூர் கிராமத்தில், ஒரு செங்கல் சூளையில் 3 சிறுவர்கள் உட்பட 19 பேர் கொத்தடிமைகளாகச் சித்ரவதை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர வைத்துள்ளது.
சிறுமூர் கிராமத்தைச் சேர்ந்த சுந்தரம் என்பவர், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகத் தனது விவசாய நிலத்தில் செங்கல் சூளை நடத்தி வந்துள்ளார். இங்குத் திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்களது குடும்பத்தினரோடு தங்கி வேலை பார்த்து வந்துள்ளனர்.
ஆனால், அங்கு நடந்தவை அனைத்தும் மனித உரிமைகளை மீறும் கொடுமையான செயல்கள். தொழிலாளர்களுக்குச் சொற்ப தொகையை முன்பணமாகக் கொடுத்துவிட்டு, அவர்களைத் தனது சூளையை விட்டு எங்கும் வெளியே செல்ல விடாமல் சுந்தரம் கட்டிப்போட்டுள்ளார். ஒரு சிறைச்சாலையில் கைதிகள் அடைக்கப்படுவதைப் போல, இந்த 19 தொழிலாளர்களையும் கடந்த 8 ஆண்டுகளாகத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்துள்ளார்.
ஒரு நாளைக்கு 12 மணி நேரம் கடுமையான உழைப்பு, ஆனால் அதற்கேற்ற ஊதியம் கிடையாது. சொந்த ஊருக்கோ அல்லது உறவினர்களைப் பார்க்கவோ கூட அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வெளியில் இருப்பவர்களுக்குத் தங்களது நிலைமை தெரிந்துவிடக்கூடாது என்பதில் அந்த உரிமையாளர் மிகக் கவனமாக இருந்து வந்துள்ளார்.
ஒருவழியாகத் தனது துயர நிலையை வெளியே சென்ற ஒரு நபரிடம் அந்த தொழிலாளர்கள் ரகசியமாகத் தெரிவிக்க, அந்த தகவல் மாவட்டச் சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் காதுகளுக்குச் சென்றது. இதையடுத்து, மாவட்டச் சட்டப்பணிகள் ஆணைக்குழு துணை நீதிபதி விஜயலட்சுமி தலைமையில் ஒரு அதிரடி மீட்புக் குழு அமைக்கப்பட்டது.
ஆரணி வருவாய் கோட்டாட்சியர் சிவா, டிஎஸ்பி சுரேஷ் சண்முகம் மற்றும் வருவாய்த் துறையினர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அந்த செங்கல் சூளைக்கு மின்னல் வேகத்தில் சென்றனர். அங்கு நடந்த சோதனையில், மூன்று சிறுவர்கள் உட்பட 19 பேர் மிக மோசமான சூழலில் கொத்தடிமைகளாக வேலை செய்வதைக் கண்டு அதிகாரிகள் அதிர்ந்து போயினர்.
உடனடியாக அந்த 19 பேரையும் மீட்ட அதிகாரிகள், அவர்களை அரசு வாகனங்களில் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களுக்குத் தேவையான உணவுகள், உடைகள் மற்றும் முதலுதவி சிகிச்சைகள் வழங்கப்பட்டன. அவர்களின் விபரங்களைக் கேட்டறிந்த அதிகாரிகள், அவர்களைப் பாதுகாப்பாகத் தங்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.
அதே சமயம், இத்தனை ஆண்டுகளாக மனிதர்களை அடிமையாக வைத்துச் சூளை நடத்தி வந்த சுந்தரம், போலீசாரைக் கண்டதும் தலைமறைவாகிவிட்டார். அவர் மீது ஆரணி கிராமிய போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிரமாகத் தேடி வருகின்றனர். 2026-லும் இப்படியொரு கொடூரமான கொத்தடிமை முறை நிலவி வருவது சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
