Monday, January 19, 2026

கரூர் சம்பவம் : சிபிஐ குற்றப்பத்திரிகையில் விஜய் பெயர்?

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில், சிபிஐ தாக்கல் செய்ய உள்ள குற்றப்பத்திரிகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் பெயரும் இடம்பெறக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி நடைபெற்ற விஜய்யின் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கடும் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கை, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் சிபிஐ தற்போது விசாரித்து வருகிறது.

முதற்கட்டமாக கரூரில் முகாமிட்டு விசாரணை மேற்கொண்ட சிபிஐ அதிகாரிகள், தற்போது இந்த வழக்குடன் தொடர்புடைய அனைவரையும் சிபிஐ விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தியதைத் தொடர்ந்து, அக்கட்சியின் தலைவர் விஜய்யிடமும் கடந்த ஜனவரி 12-ஆம் தேதி 6 மணி நேரத்திற்கும் மேலாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இதையடுத்து, இன்று இரண்டாவது முறையாக காலை 11 மணி முதல் விஜய்யிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே, தமிழக காவல் துறையைச் சேர்ந்த சில அதிகாரிகளிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில் பிப்ரவரி மாதத்தில் உச்ச நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய சிபிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த குற்றப்பத்திரிகையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் பெயரையும் சேர்க்க திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Related News

Latest News