நடிகர் விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படம், பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சர்ச்சைக்குரிய காட்சிகள் காரணமாக இதுவரை தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதனால் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,திரைப்பிரபலங்கள் பலரும் ஜனநாயகன் படத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்ட பதிவில்,
“சினிமா இன்று கடினமான காலத்தில் உள்ளது. குறைந்த பட்ஜெட் சுயாதீனப் படங்களுக்கு திரையரங்குகள் இல்லை. பெரிய பட்ஜெட் படங்கள் தணிக்கை, சான்றிதழ் தாமதத்தால் ஒத்திவைப்பு. தணிக்கை காலக்கெடு விதிகள் சீரமைக்கப்பட வேண்டும். பிரிவுகளை விட்டு, சினிமாவைக் காப்பாற்ற அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.
நடிகர் ரவிமோகன் வெளியிட்டுள்ள பதிவில்,
“அண்ணா.. ஒரு தம்பியாக, உங்களுக்குத் துணையாக நிற்கும் கோடிக்கணக்கான தம்பிகளில் ஒருவனாக நானும் உங்களுடன் நிற்கிறேன். உங்களுக்கு ஒரு தேதி தேவையில்லை.. நீங்கள்தான் தொடக்கம். அந்தத் தேதி எப்போது வந்தாலும், பொங்கல் அப்போதுதான் தொடங்கும். நான் விஜய் அண்ணாவுடன் நிற்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
நடிகை சனம் ஷெட்டி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “அநியாயத்தின் உச்சகட்டம் இது எல்லாம். ஆனால் நீங்க பண்ணுங்க.. நீங்க இப்படி பண்ண.. பண்ண.. அவங்க (விஜய்) உயர்ந்து கொண்டே தான் போவாங்க. நாங்க கை விட்டுவிட மாட்டோம். பொங்கல் அன்று படம் வரவில்லை என்றால் என்ன? படம் வெளியாகும் நாள் தான் நமக்கு பொங்கல். சும்மாவே ஜன நாயகன் வேற லெவல் பிளாக் பஸ்டர் தான். என்னமோ நினைத்து நீங்கள் செய்த வேலையால், இப்போது சினிமா வரலாற்றிலேயே யாருமே எதிர்பார்க்காத, யாருமே செய்யாத சம்பவத்தை நாங்கள் செய்து காட்டுவோம். காத்திருங்கள். காத்திருக்க நாங்கள் ரெடி, அதற்கு அது தகுதியானதும் கூட. நீ வா தல நாங்க இருக்கோம்” என்று தெரிவித்துள்ளார்.
இயக்குனர் அஜய் ஞானமுத்து வெளியிட்டுள்ள பதிவில்,
“இது அதிகாரத்தின் அப்பட்டமான துஷ்பிரயோகம். எந்தவொரு திரைப்படமும் ஒருவரை மட்டும் சார்ந்தது அல்ல, ஒரு படம் திரைக்கு வர நூற்றுக்கணக்கான மக்களின் உழைப்பும் பணமும் சம்பந்தப்பட்டுள்ளது. படக்குழுவினருக்கு எனது முழு ஆதரவு. இது தளபதியின் படம், அவருடைய கடைசிப் படம். அது எப்போது வெளியானாலும், முன்னெப்போதும் இல்லாத வகையில் அதை நாங்கள் கொண்டாடுவோம்!! தலைவன் படம் எப்போது ரிலீஸோ, அப்போது தியேட்டர் பக்கம் செல்கிறேன்!!” என்று தெரிவித்துள்ளார்.
நடிகர் சிபி சத்யராஜ் வெளியிட்டுள்ள பதிவில்,
“ஜனநாயகன் வெளியீட்டை சுற்றி நடக்கும் அனைத்து நிகழ்வுகளும் மிகப்பெரிய வெற்றிக்கான சரியான மேடையை அமைத்து தருகின்றன. நம்பிக்கையோடு இருங்கள். நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்” என்று தெரிவித்துள்ளார்.
