மதுரை மாவட்டம், எழுமலை கோட்டைப்பட்டியைச் சேர்ந்தவர் மகாலிங்கம். இவர் சிறப்புப் படை காவலராக 2023 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்துள்ளார்.
இவர், சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு முன்பாக நேற்றிரவு முதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்துள்ளார். இந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் திடீரென பாதுகாப்பிற்காக வைத்திருந்த துப்பாக்கியால் தனக்குதானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்துள்ளார்.
அங்கு பணியில் இருந்த மற்ற காவலர்கள், மகாலிங்கத்தை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் காவலர் மகாலிங்கம் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து காவலர் மகாலிங்கத்தின் உடல், உடற்கூராய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில் காவலர் மகாலிங்கம் தனது தற்கொலைக்கு யாரும் காரணமில்லை எனக் கூறி கடிதம் எழுதிவைத்துவிட்டு, பின்னர் தற்கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
