செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சிலாவட்டம் பகுதியில் ஏற்பட்ட கொடூரக் கொலை சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சிலாவட்டத்தைச் சேர்ந்த சரண் (20) என்ற இளைஞர், அதே பகுதியைச் சேர்ந்த மதுமிதா என்ற பெண்ணை கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து, சுமார் நான்கு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்குப் பிறகும் மதுமிதா தனது ஆண் நண்பருடன் மொபைல் போனில் அடிக்கடி பேசிவந்ததாக கூறப்படுகிறது. இதனால் சரண் பலமுறை கண்டித்தும் அவர் கேட்கவில்லை.
இதனால் கடும் கோபமடைந்த சரண், நேற்று மாலை மதுமிதாவை ஒரத்தி அருகிலுள்ள மலைப்பகுதிக்கு அழைத்து சென்றார். அங்கு இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த நேரத்தில் சரண் தான் வைத்திருந்த கத்தியை எடுத்துக் கொண்டு மதுமிதாவின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
அதன்பின் அவர் நடந்ததை தன் தாயிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதிர்ச்சி அடைந்த தாய் உடனடியாக காவல்துறையிடம் தகவல் தெரிவித்தார். அதன் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற மதுராந்தகம் போலீசார் மதுமிதாவின் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவத்தையடுத்து போலீசார் சரணை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவர்மீது ஏற்கனவே கஞ்சா வழக்கு உள்பட பல குற்றச்சாட்டுகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
