ஒரு சாதாரண மனிதராக சினிமா உலகில் சிறந்து விளங்குவது என்பது மிகவும் எளிதான ஒன்று அல்ல. ஆனால் அப்படிப்பட்ட ஒருவர் சினிமா துறையில் தனது சரித்திரத்தை பதித்திருக்கிறார். இவர் பாலிவுட்டில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார். பல ரூ. 100 கோடி வெற்றி திரைப்படங்களைக் கொடுத்திருக்கிறார்.
அவர் வேறு யாருமல்ல…ஆயுஷ்மான் குரானாதான். இவர் சண்டிகரில் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த ஆயுஷ்மான் குரானா, விக்கி டோனர், ஆர்டிகல் 15, தும் லகா கே ஹைஷா, பதாய் ஹோ, அந்தாதுன் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் நடிகர் மட்டுமல்ல, பிரபல பாடகரும் கூட. பானி டா ரங், சத்தி காலி, நைனா டா கியா கசூர் போன்ற பல பாடல்களை அவர் பாடியுள்ளார். முன்பு, தனது திரைப்படத்தை விளம்பரப்படுத்தும்போது, ஆயுஷ்மான் தனது நண்பர்களுடன் ரெயில்களில் பாடல்களைப் பாடிய பழைய நினைவு கூறினார்.
அவர் கூறுகையில், ”எனது கல்லூரி நாட்களில், டெல்லியிலிருந்து மும்பைக்கு ‘பஷ்சிம் எக்ஸ்பிரஸ்’ என்ற ரெயில் சென்று கொண்டிருந்தது. அதில், நானும் என் நண்பர்களும் சேர்ந்து ஒவ்வொரு பெட்டியாக பாடி நிகழ்ச்சி நடத்துவோம். பயணிகள் எங்களுக்கு பணம் கொடுப்பார்கள். அதை வைத்து நாங்கள் கோவாவுக்கு சுற்றுலா சென்றோம்” என்றார்.
தற்போது ஆயுஷ்மான் ”தாமா” என்ற ஹாரர் திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில், ராஷ்மிகா மந்தனா, பரேஷ் ராவல் மற்றும் நவாசுதீன் சித்திக் ஆகியோர் நடித்துள்ளனர். ஆதித்யா சர்போத்தார் இயக்கியுள்ள இந்த திரைப்படம், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 21-ம் தேதி வெளியாக உள்ளது.
