Wednesday, September 10, 2025

சி.பி.ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதி பதவி ஏற்பு எப்போது?

நேற்று குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் நடைபெற்ற நிலையில், அதில் மொத்தம் 452 வாக்குகளை பெற்று இந்தியாவின் 15வது குடியரசுத் துணைத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வாகியுள்ளார். முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி 300 வாக்குகளை பெற்று தோல்வி அடைந்துள்ளார்.

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று இருக்கும் சி.பி.ராதாகிருஷ்ணன் பா.ஜ.க. தலைவர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார். இன்று காலையிலும் அவர் பா.ஜ.க. எம்.பி.க்கள் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து நன்றி கூறினார்.சி.பி.ராதாகிருஷ்ணன் குடியரசுத் துணைத் தலைவராக பதவி ஏற்கும் விழா நாளை மறுநாள் அதாவது, வெள்ளிக்கிழமை நடைபெறும் என்று தெரிய வந்துள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை பாராளுமன்ற அதிகாரிகள் செய்து வருகிறார்கள். குடியரசுத் துணைத் தலைவர் பதவி ஏற்பு பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. பதவி ஏற்பு நேரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதும் அதற்கு ஏற்ப அழைப்பிதழ் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குடியரசுத் துணைத் தலைவருக்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணமும், அரசியல் காப்பு உறுதிமொழியும் செய்து வைப்பார்.

இதனைத் தொடர்ந்து சி.பி.ராதாகிருஷ்ணன் பாராளுமன்றத்தில் குடியரசுத் துணைத் தலைவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள அறைக்கு சென்று பொறுப்புகளை ஏற்றுக் கொள்வார். தற்போது சி.பி.ராதாகிருஷ்ணன் மகாராஷ்டிரா மாநில கவர்னராக பதவி வகித்து வருகிறார். அந்த பதவியை அவர் ராஜினாமா செய்து கடிதம் அனுப்புவார் என்று கூறப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News