சென்னை, வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு மழை வெளுத்து வாங்கிய நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 9 இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதைப் பற்றி வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழகப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அது மட்டுமல்லாமல் வருகின்ற 25ம் தேதி வாக்கில், ஒரிசா – மேற்கு வங்காள கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும்.
இதனால், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், கடலூர், தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்த வரை, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27° செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என்று கூறப்படுகிறது.
வடக்கு வங்கக்கடலின் அநேக பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் அவ்வப்போது 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். ஆகையால், இப்பகுதிகளுக்கு இன்று மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகின்றனர்.