Tuesday, July 1, 2025

மொத்தம் ‘5 பேரு’ CSKக்கு வரப்போற ‘வீரர்கள்’ யாரு?

நடந்து முடிந்த IPL தொடர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு தவிர்த்து, மற்ற அணிகளுக்கு அவ்வளவு உவப்பானதாக இல்லை. பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய 3 அணிகளும் Play Offக்கு முன்னேறியதால், அவர்களுக்கும் இந்த தொடர் சுவாரசியமான ஒன்றாகவே இருந்தது.

ஆனால் முதல் IPL கோப்பையை வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ், 6வது கோப்பைக்கு அடிபோட்ட சென்னை சூப்பர் கிங்ஸ், தங்களின் முதல் கோப்பையை வெல்ல போராடும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் நடப்பு சாம்பியன் அந்தஸ்தை தக்க வைக்கத் தவறிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ், 2வது கோப்பையை வெல்ல முடியாமல் தவிக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இந்த IPL தொடர் ஆகப்பெரும் Nightmare ஆக மாறிவிட்டது.

குறிப்பாக CSK அணிக்கு இந்த 18வது IPL தொடர், கனவிலும் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு கொடூரமாக இருந்தது. மாசத்துக்கு 1 வெற்றி என ஆடிய 14 போட்டிகளில், 4 வெற்றிகளை மட்டுமே பெற்றதால் பாயிண்ட் டேபிளில் கடைசிவரை 10வது இடத்தை தாண்ட முடியவில்லை. தொடருக்கு நடுவே மாற்று வீரர்களை எடுத்தும்கூட இந்த 10வது இடத்தை விட்டு சென்னையால் மேலேற முடியவில்லை.

இதனால் 19வது IPL தொடருக்கு இப்போது இருந்தே சென்னை அணி தயாராகி வருகிறது. இதற்காக ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சனை, Trading முறையில் வாங்கிட CSK தீயாய் வேலை செய்கிறது. இந்தநிலையில் 5 டாப் வீரர்களை IPL அணிகள் விடுவிக்க முடிவு செய்துள்ளதாக, தகவல்கள் அடிபட்டு வருகின்றன.

அதன்படி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக ஆடிவரும் இஷான் கிஷன், மீண்டும் தாய்க்கழகமான மும்பை இந்தியன்ஸ் அணிக்கே திரும்புகிறாராம். இதேபோல பஞ்சாப் கிங்ஸ் அணி கிளென் மேக்ஸ்வெல்லை விடுவிக்க திட்டமிட்டு உள்ளதாம். சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் என 2 அணிகள் அவருக்கு ஸ்கெட்ச் போட்டு வருகின்றன.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் 23 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கு தக்க வைக்கப்பட்ட, வெங்கடேஷ் அய்யர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு செல்கிறாராம். மும்பை இஷான் கிஷனை எடுக்கவில்லை என்றால் கொல்கத்தாவுக்கு அவரை அனுப்பிவிட்டு, பதிலுக்கு வெங்கடேஷை வாங்கிட ஹைதராபாத் பிளான் செய்து வருகிறதாம்.

நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, தங்களின் நட்சத்திர வீரர் லியாம் லிவிங்ஸ்டனை Trading செய்ய திட்டமிட்டுள்ளதாம். மும்பை அல்லது லக்னோ என இரண்டு அணிகளுமே லிவிங்ஸ்டனை வாங்கிட பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிகிறது.

நாம் ஏற்கனவே சொன்னதுபோல சஞ்சு சாம்சனை ராஜஸ்தானிடம் இருந்து வாங்கிட, சென்னை முடிவு செய்துள்ளது. பதிலுக்கு அஸ்வின், துபே இருவரையும் ராஜஸ்தானுக்கு பார்சல் செய்வது CSKவின் திட்டமாக இருக்கிறது. ஆக மொத்தம் மேற்கண்ட 5 வீரர்களில் சஞ்சு சாம்சன், கிளென் மேக்ஸ்வெல் ஆகிய 2 வீரர்களும் சென்னைக்கு வரலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news