IPL தொடரின் நடப்பு சாம்பியன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ். இந்த அணிக்காக கடந்த 2 வருடங்களாக யாஷ் தயாள் ஆடிவருகிறார். வேகப்பந்து வீச்சாளரான இவர் உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியை சேர்ந்தவர்.
உத்தர பிரதேச மாநில அணிக்காக ஆடிவரும் யாஷ், இன்னும் இந்திய அணியில் அறிமுகமாகவில்லை. இந்தநிலையில் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டார் என்று, யாஷ் தயாளுக்கு எதிராக உத்தர பிரதேசத்தின் காசியாபாத் பகுதியை சேர்ந்த, இளம்பெண் ஒருவர் புகார் அளித்து பரபரப்பை கிளப்பி இருக்கிறார்.
இதுகுறித்து கடந்த 14ம் தேதி இளம்பெண் பெண்கள் பாதுகாப்பு உதவி எண்ணில் புகார் அளித்தார். அதனடிப்படையில் யஷ் தயாள் மீது வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால், அதன்பிறகு காவல்துறை தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், உத்தரபிரதேச முதலமைச்சர் அலுவலகத்தில் அந்த பெண் தற்போது புகார் அளித்துள்ளார்.
புகாரில், ”கடந்த 5 வருடங்களாக நானும், யாஷ் தயாளும் நன்றாக பழகினோம். திருமணம் செய்துகொள்கிறேன் எனக் கூறி வாக்குறுதி கொடுத்தார். மேலும், அவரது குடும்ப நபர்களிடம் என்னை ‘மருமகள்’ என அடையாளப்படுத்தினார். இதனை நம்பி அவரிடம் பல வழிகளில் ஏமாந்துவிட்டேன். உணர்ச்சி ரீதியாகவும், மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் சுரண்டப்பட்டேன். 5 வருடங்கள் நன்றாக பழகிய நிலையில், தற்போது அவர் என்னை ஏமாற்றிவிட்டார்.
என்னுடன் அடிக்கடி சண்டை போட ஆரம்பித்தார். மேலும், திருமணம் செய்துகொள்ள முடியாது எனக் கூறிவிட்டு சென்றார். அதன்பிறகுதான், எனக்கு ஒரு உண்மை தெரிய வந்தது. அவர் மற்ற பெண்களுடனும் இதே போன்ற தொடர்பில் இருந்துள்ளார். இது குறித்து, ஜூன் 14ம் தேதி 181 என்ற பெண்கள் உதவி எண்ணிற்கு அழைத்து, இது குறித்து புகாரும் கொடுத்தேன். ஆனால், எனது புகாரை பதிவுசெய்ய மறுத்துவிட்டனர்.
இதனால்தான், தற்போது முதல்வர் தனிப்பிரிவில் புகார் கொடுத்துள்ளேன். எனக்கு நியாயம் கிடைக்க வேண்டும். என்னிடம் அவருடனான Chatகள், ஸ்கிரீன் ஷாட்கள், வீடியோ அழைப்புகள் மற்றும் புகைப்படங்கள் ஆதாரமாக உள்ளன. இந்த விவகாரத்தில் விரைவான விசாரணை நடத்தப்பட்டு, அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இந்த நடவடிக்கை அவருக்கு மட்டுமல்ல, இதுபோன்ற ஏமாற்று உறவுகளுக்கு பலியாகிற அனைத்து பெண்களுக்கும் முக்கியமானது”, இவ்வாறு அதில் தெரிவித்து இருக்கிறார்.
இதையடுத்து சமூக வலைதளங்களில் யாஷ் தயாள் குறித்த பதிவுகள் வைரலாகி வருகின்றன. இளம்பெண்ணின் புகாருக்கு யாஷ் தயாள் தரப்பில் இருந்து இதுவரை எந்தவொரு விளக்கமும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.