இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றத்தால் திட்டமிட்டதை விடவும், இந்த வருடம் IPL தொடர் தாமதமாகவே முடிவுக்கு வந்தது. என்றாலும் வீரர்களை அணியில் இருந்து விடுவிப்பது, மாற்று வீரர்களை வாங்குவது போன்ற வேலைகளை, தற்போது இருந்தே IPL அணிகள் முன்னெடுக்க ஆரம்பித்து இருக்கின்றன.
19வது IPL தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் மாதம் நடைபெறலாம் என்று தெரிகிறது. இந்தநிலையில் ரசிகர்களின் பேவரைட் அணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ், மொத்தமாக நான்கு வீரர்களை அணியில் வளைத்துப்போட முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
லிஸ்டில் முதல் வீரராக ராஜஸ்தான் வீரர் சஞ்சு சாம்சன் இருக்கிறார். இவரை டிரேடிங் முறையில் அணிக்குள் கொண்டுவர சென்னை முடிவு செய்துள்ளது. அது முடியாதபட்சத்தில் மினி ஏலத்தில் பெரும்தொகையை கொடுத்து எடுக்கவும் CSK ரெடியாக இருக்கிறது.
2வது வீரர் துஷார் தேஷ்பாண்டே. முன்னதாக சென்னை அணிக்கு தேஷ்பாண்டே சிறப்பாக விளையாடி இருக்கிறார். முக்கியமான கட்டத்தில் விக்கெட் எடுத்து கொடுப்பவர் என்பதால், இவரையும் வெகுவாக டார்கெட் செய்ய திட்டமிட்டு இருக்கிறார்களாம்.
CSK முன்னாள் கேப்டன் ருதுராஜ் காயத்தால் தொடரில் இருந்து வெளியேற, தேஷ்பாண்டேவின் பந்துவீச்சே முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. லிஸ்டில் 3வது வீரர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் லியாம் லிவிங்ஸ்டன். சேப்பாக்கம் மைதானம் சுழற்பந்துக்கு சாதகமாக இருப்பதும், லிவிங்ஸ்டன் ஆல் ரவுண்டராக இருப்பதும் இதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது.
இதில் கடைசி வீரராக கிளென் மேக்ஸ்வெல் இருக்கிறார். நடப்பு தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக ஆடிய மேக்ஸ்வெல் தொடரின் பாதியில் வெளியேறி விட்டார். அத்தோடு பஞ்சாப் தங்களின் பிளேயிங் லெவனை செட் செய்து விட்டதால், மேக்ஸ்வெல் அங்கு தேவையில்லாத ஆணி தான். இதனால் அந்த அணி இவரை விடுவிக்க வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.
எனவே இவர் மீதும் CSK ஒரு கண்ணை வைத்திருக்கிறது. தற்போது பார்ம் அவுட்டில் இருந்தாலும் இவருக்கான தொகை குறைவு என்பதும், ஆல்ரவுண்டராக மேக்ஸ்வெல் திகழ்வதும் இதற்கு முக்கிய காரணங்களாக பார்க்கப் படுகின்றன. எனவே மேற்கண்ட நால்வரும் அணிக்குள் வந்தால், CSKவின் பிளேயிங் லெவன் மேலும் பன்மடங்கு வலிமை அடையும் என எதிர்பார்க்கப் படுகிறது.