ஒடிசாவில் ஒரு பெண் வேறு சாதியைச் சேர்ந்தவரை திருமணம் செய்ததால், அவரது குடும்பத்தைச் சேர்ந்த நாற்பது பேர் “சுத்திகரிப்பு சடங்கு” என்ற பெயரில் மொட்டை அடிக்கபட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.
ஓடிசா மாநிலத்தின் ராயகடா மாவட்டம், காசிபூர் வட்டாரத்தில் உள்ள பைங்கனகுடா கிராமத்தில் சமீபத்தில் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண், அருகிலுள்ள கிராமத்தில் உள்ள பட்டியல் சாதியினரைச் சேர்ந்த ஒருவருடன் திருமணம் செய்து கொண்டார்.
இந்த திருமணம் கிராம மக்களிடையே கடும் எதிர்ப்பை உருவாக்கியது. பெண் வீட்டாரை மீண்டும் சமூகத்தில் ஏற்றுக்கொள்ள, கிராம மக்கள் சுத்திகரிப்பு சடங்குகளை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர். இதை செய்யவில்லை என்றால் அவர்கள் சமூகத்தில் நிரந்தரமாக புறக்கணிக்கப்படுவார்கள் என்று மிரட்டியுள்ளனர்.
இதையடுத்து உள்ளூர் தெய்வத்தின் முன் சடங்குப்படி விலங்குகளை பலியிட்டனர். அதைத் தொடர்ந்து மொட்டை அடிக்கும் சடங்கு நடைபெற்றது. மொட்டை அடித்த குடும்ப உறுப்பினர்கள் வயலில் அமர்ந்திருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.