Monday, May 19, 2025

மகளிர் உரிமைத் தொகை திட்டம்! விரைவில் வரப் போகும் குட் நியூஸ்!

தமிழக மகளிர் உரிமைத் தொகை திட்டம் வருகிற ஜூன் மாதத்தில் விரிவாக்கம் செய்யப்படவிருக்கிறது. இதில் தற்போது உள்ள கட்டுப்பாடுகள் குறைக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு, இன்னும் அதிகமான பெண்கள் இந்த திட்டத்தின் கீழ் பயனடைய தமிழக அரசு நடவடிக்கை எடுக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

இப்போது உள்ள நிலைப்படி, குடும்பத் தலைவியல்லாத பெண்களுக்கும் ரூ.1000 தொகை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. உதாரணமாக, ஒரு வீட்டில் தாய் இல்லாத நிலையில், அப்பா மற்றும் திருமணம் ஆகாத மகள்கள் இருக்கிறார்கள் எனில், 21 வயதைக் கடந்த முதல் மகளுக்கே இந்தத் தொகை வழங்கப்படும். மேலும், விவாகரத்து பெற்ற பெண்களுக்கு தனி ரேஷன் கார்ட் இருந்தால் அவர்களுக்கும் திட்டம் மூலம் தொகை கிடைக்கும்.

முந்தைய கட்டத்தில் ஆவணங்கள் தவறாக இருந்ததால் சிலருக்கு தொகை வழங்கப்படவில்லை. ஆனால், புதிய கட்டத்தில் அந்த வாய்ப்பு மறுபடியும் கிடைக்கலாம். திருமணம் ஆன பிறகு குடும்பத் தலைவி ஆகியிருக்கும் பெண்களும் இப்போது விண்ணப்பிக்கலாம்.

திட்டம் விரிவடையும் நிலையில், பலர் ரேஷன் அட்டையில் இருந்து பாட்டி போன்றோர் பெயர்களை நீக்க முயற்சிக்கிறார்கள். ஆனால் அரசின் விளக்கம் ஒன்றே — குடும்பத் தலைவியாக இருக்கும் பெண் பென்ஷன் வாங்கக்கூடாது. அவருடைய கணவர் அரசு வேலையில் இருப்பதும் அனுமதிக்கப்படாது. மற்றபடி வீட்டில் எத்தனை பெண்கள் பென்ஷன் வாங்கினாலும் அது தடையல்ல.

முதற்கட்டத்தில் 1 கோடி 25 லட்சம் பெண்கள் திட்டத்தில் சேர்க்கப்பட்டிருந்தனர். இந்த வருடம் கூடுதல் 10 முதல் 15 லட்சம் பெண்கள் சேர்க்கப்படவுள்ள நிலையில், பயனாளிகளின் எண்ணிக்கை 1 கோடியே 45 லட்சமாக உயர இருக்கிறது. இதற்காக தமிழகம் முழுவதும் ஜூன் 4ஆம் தேதி 9000 இடங்களில் சிறப்பு கேம்புகள் நடத்தப்படவுள்ளன.

இதன் மூலம் புதிய பயனாளிகள் விண்ணப்பிக்கலாம், மீண்டும் மறுக்கப்பட்டவர்கள் தகுதி உள்ளவர்களாக இருந்தால் அவர்களும் தொகையை பெற வாய்ப்பு பெறலாம்.

Latest news