உலகளவில் சுற்றுச்சூழல் மாசுபாடு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் தில்லி, மும்பை உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் காற்று மாசு கடுமையாக காணப்படுகிறது. பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகள் அமலில் இருந்தாலும், மக்கள்தொகை பெருக்கம் மற்றும் வாகனப் பயன்பாட்டின் அதிகரிப்பு காரணமாக காற்று மாசுபாடு கட்டுக்குள் வராமல் உள்ளது.
இந்த காற்று மாசுபாட்டால் நுரையீரல் தொடர்பான தொற்றுகள் மற்றும் சுவாசக் கோளாறுகள் அதிகமாக ஏற்படுகின்றன. இதனைத் தடுப்பதற்காக மருத்துவர்கள் சில முக்கிய ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.
காற்று மாசு ஏற்கனவே மோசமான நிலையில் இருக்கும் போது, நுரையீரலை மேலும் பாதிக்கும் புகைப்பிடிக்கும் பழக்கத்தை முழுமையாக கைவிட வேண்டும்.
பிராணயாமா உள்ளிட்ட மூச்சுப் பயிற்சிகளை தொடர்ந்து செய்வதன் மூலம் நுரையீரலின் செயல்திறன் மேம்படும்.
சத்தான காய்கறிகள் மற்றும் பழங்களை அதிக அளவில் எடுத்துக்கொள்வது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, நுரையீரல் ஆரோக்கியத்தையும் பாதுகாக்க உதவும்.
உடலுக்கு நல்ல ஆழ்ந்த தூக்கம் மிகவும் அவசியம். போதிய தூக்கம் கிடைக்கும் போது, மாசுபாட்டால் உடலில் ஏற்படும் பாதிப்புகளை உடல் தானாகவே சரி செய்யும் திறன் அதிகரிக்கும்.
போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ள இடங்களிலும், காற்றுத் தரக்குறியீடு மோசமாக உள்ள பகுதிகளிலும் செல்லும்போது முகக்கவசம் அணிவது நல்லது.
தினமும் அதிக அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். நீர் அதிகம் கொண்ட உணவுகளை சேர்த்துக் கொள்வதும் சுவாசக் கோளாறுகளை குறைக்க உதவும்.
நீங்கள் வசிக்கும் பகுதியில் காற்று மாசு எந்த அளவில் உள்ளது என்பதை தினமும் கண்காணித்து, அதற்கேற்ப உங்கள் நடவடிக்கைகளை அமைத்துக் கொள்ள வேண்டும்.
காற்று மாசு அதிகமாக இருக்கும் நேரங்களில், முடிந்தவரை வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக குழந்தைகளை அந்த நேரங்களில் வெளியில் அனுப்பக் கூடாது.
வீட்டில் பயன்படுத்தப்படும் மின் சாதனங்களின் பயன்பாட்டை தேவையற்ற அளவில் குறைப்பதன் மூலம் உள்ளக மாசுபாட்டையும் குறைக்கலாம்.
பயன்படுத்தாத நேரங்களில் மின்விளக்குகள் மற்றும் பிற மின் சாதனங்களை அணைத்து வைப்பது அவசியம்.
தனிப்பட்ட கார் மற்றும் பைக் பயன்பாட்டை குறைத்து, பொது போக்குவரத்தை அதிகம் பயன்படுத்த வேண்டும். மேலும், காற்று மாசுபாட்டை குறைக்கும் மின் சைக்கிள்கள் மற்றும் மின் பைக்குகளை பயன்படுத்தலாம்.
வீட்டுக் குப்பைகளை எரிப்பதை தவிர்க்க வேண்டும். அதேபோல், பட்டாசுகளை வெடிப்பதையும் கட்டுப்படுத்துவது காற்று மாசுபாட்டை குறைக்க முக்கியமானதாகும்.
