தமிழக அரசியல் களம் இப்போது திருச்சி கிழக்குத் தொகுதியை நோக்கித் திரும்பியிருக்கிறது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதலமைச்சர் விஜய், தேர்தல் விதிமுறைப்படி தனது திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால் இன்னும் சில மாதங்களில் அங்கே இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. முதலமைச்சர் விட்டுக்கொடுத்த தொகுதியில் தவெக சார்பில் களம் காணப்போகும் அந்த ‘மாஸ்’ வேட்பாளர் யார்? இதுதான் இப்போது தமிழக அரசியலின் ஹாட் டாபிக்.
தொடக்கத்தில், முன்னாள் அமைச்சரும் தவெக-வின் சீனியர் தலைவருமான கு.ப. கிருஷ்ணன் மீண்டும் இங்கே போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவருக்குத் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தலைவர் பதவியை முதலமைச்சர் விஜய் வழங்கியுள்ளதால், அவர் இந்த இடைத்தேர்தல் ரேசில் இருந்து விலகிக் கொண்டதாகவே பார்க்கப்படுகிறது. அதேபோல், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இங்கே போட்டியிடுவார் எனப் பேச்சுக்கள் எழுந்தன. ஆனால், தவெக அமைச்சரவையில் தற்போது இடங்கள் ஏதும் காலியாக இல்லை என்பதாலும், துணை முதலமைச்சர் பதவி உருவாக்கப்படவில்லை என்பதாலும் திருமா மாநில அரசியலுக்கு வருவது இப்போதைக்குச் சாத்தியமில்லை என்றே தெரிகிறது.
இந்தச் சூழலில்தான், ஒரு புதிய அதிரடிப் பெயர் அடிபடத் தொடங்கியுள்ளது. அவர்தான் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம். அரசுப் பணியில் இருந்தபோதே “இலஞ்சம் தவிர்த்து, நெஞ்சம் நிமிர்த்து” என்ற முழக்கத்தோடு ஊழலுக்கு எதிராகப் போர் கொடி தூக்கியவர் சகாயம். இளைஞர்கள் மத்தியில் ஒரு மிகப்பெரிய நேர்மைச் சின்னமாகத் திகழும் இவரைத் திருச்சி கிழக்குத் தொகுதியில் வேட்பாளராகக் களமிறக்க விஜய் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் கசிகின்றன.
நேர்மையான நிர்வாகம், படித்த இளைஞர்களுக்கு முன்னுரிமை என்கிற முதலமைச்சர் விஜய்யின் தாரக மந்திரத்திற்குச் சகாயம் ஐஏஎஸ் ஒரு மிகச்சரியான தேர்வாக இருப்பார் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். அதே சமயம், டெல்லி நாடாளுமன்றத்தின் மாநிலங்களவைக்கும், அதாவது ராஜ்யசபாவிற்கும் தவெக சார்பில் ஒரு பிரதிநிதி அனுப்பப்பட வேண்டும். எனவே, சகாயம் அவர்களை டெல்லிக்கு அனுப்பி தேசிய அளவில் குரல் கொடுக்க வைப்பாரா அல்லது திருச்சி கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் நிறுத்தி அமைச்சரவையில் இணைப்பாரா என்பதுதான் முதலமைச்சர் விஜய்யின் கையில் இருக்கும் அந்த ரகசிய மாஸ்டர் பிளான்.
திருச்சி கிழக்குத் தொகுதியைத் தக்கவைத்துக்கொள்ள விஜய் எடுக்கப்போகும் அந்த இறுதி முடிவு என்ன? சகாயம் ஐஏஎஸ் அவர்களின் அரசியல் என்ட்ரி தமிழகத்தில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்? அடுத்த சில நாட்களில் இதற்கான அதிகாரப்பூர்வ விடை கிடைத்துவிடும்.
