IPL தொடரைப் பொறுத்தவரை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு என மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. பார்மில் இல்லாத வீரர்களைக் கூட பார்முக்கு கொண்டு வந்துவிடும் சென்னைக்கு, இந்த 2025ம் ஆண்டு மிகவும் மோசமான காலகட்டமாக உள்ளது.
தொடரில் இருந்து Play Off வாய்ப்பை இழந்து முதல் அணியாக வெளியேறியுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த மன வருத்தத்தில் சுற்றித் திரிகின்றனர். என்றாலும் மீண்டும் வலிமையாக 2026ம் ஆண்டு Comeback கொடுப்போம் என ‘தல’ தோனி வாக்களித்துள்ளார்.
இதற்கு ஏற்றவாறு ஆயுஷ் மாத்ரே, டெவால்ட் பிரேவிஸ், நூர் அஹமது, ஷேக் ரஷீத், உர்வில் படேல் என சின்ன பசங்களை வைத்து, அணியின் பிளெயிங் லெவனைக் கட்டமைத்து வருகின்றனர். இதற்கிடையே தொடர் தோல்விகளால் தோனியின் ஓய்வு எப்போது?, என்ற கேள்வி சென்னை அணி நிர்வாகத்தைத் துரத்தி வருகிறது.
இந்தநிலையில் சென்னை அணியின் தலைமை பயிற்சியாளர் பிளெமிங், கேப்டன் மகேந்திர சிங் தோனியின் ஓய்வு குறித்த கேள்விக்கு ”I Dont Know” என்று 3 வார்த்தையில் பதில் அளித்துள்ளார். இதையடுத்து தோனிக்கு தொடர்ந்து அணியில் வாய்ப்பு வழங்கப்படுமா? என்ற கேள்வி எழுந்தது.
இதற்கு பிளெமிங், ” தோனி மிகச்சிறந்த வீரர். அவர் விரும்பும்வரை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடலாம். நாங்களாக தோனியை நீக்க வாய்ப்பே இல்லை. தோனிக்கு எல்லாம் தெரியும். அவர் எடுப்பதே இறுதி முடிவு,” என தோனியின் பக்கம் பந்தை தள்ளி விட்டுள்ளார்.
இதனால் தன்னுடைய ஓய்வு குறித்து இனி தோனி தான் பதில் சொல்ல வேண்டும். இதற்கு மத்தியில் 2026ம் ஆண்டு CSK கோப்பை வென்றால், அத்துடன் தோனி தன்னுடைய ஓய்வினை அறிவித்து விடுவார் என்றும் தகவல்கள் அடிபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.