IPL கோப்பையை வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் மதிப்பு, கிடுகிடுவென ஜெட் வேகத்தில் உயர்ந்துகொண்டே செல்கிறது. என்றாலும் வெற்றிவிழாவில் 11 பேர் உயிரிழந்ததால் அணிக்கு எதிராக, கடுமையான விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றன.
குறிப்பாக சென்னை, ராஜஸ்தான் போல பெங்களூரு அணிக்கும் 1 ஆண்டு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. ஏற்கனவே சொந்த மைதானத்தை இழக்கும் நிலைக்கு RCB தள்ளப்பட்டுள்ளது. தற்போது தடையும் விதிக்கப்பட்டால் அது RCB வரலாற்றில் மிகப்பெரும் கரும்புள்ளியாக மாறக்கூடும்.
இதற்கிடையே ரத்தக்கறை படிந்த இந்த அணி தங்களுக்கு வேண்டாம் என்று, RCB உரிமையை கையில் வைத்திருக்கும் டியாஜியோ பிஎல்சி (Diageo Plc) நிறுவனம், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை விற்கப்போவதாகத் தகவல்கள் வெளியாகின. இந்திய மதிப்பில் 17 ஆயிரத்து 102 கோடி என்று, விற்பனை விலை இறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் கூறப்பட்டது.
இந்தநிலையில் விற்பனை குறித்த தகவல்களை, டியாஜியோ பிஎல்சி (Diageo Plc) நிறுவனம் அதிகாரப்பூர்வமாக மறுத்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனத்தின் செயலாளர் மிட்டல் சங்க்வி (Mital Sanghvi), “மேற்கூறப்படும் மீடியா அறிக்கைகள் எல்லாம் யூகங்களின் அடிப்படையானதே, என்பதை எங்கள் நிறுவனம் தெளிவுபடுத்த விரும்புகிறது.
இதுபோன்ற எந்த விவாதத்தையும் நாங்கள் தொடங்கவில்லை”, என்று இந்திய பங்குச் சந்தையின் ஒழுங்குமுறை அமைப்பான BSE-க்குத் தெரிவித்துள்ளார். டியாஜியோ பிஎல்சி (Diageo Plc) நிறுவனத்தின் சார்பாக, இந்தியாவில் யுனைடெட் ஸ்பிரிட் நிறுவனத்தால் RCB அணி நடத்தப்படுகிறது. பெங்களூரு அணி விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியானதை அடுத்து, யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 3.3 சதவீதம் அதிகரித்துள்ளது.
அத்துடன் உலகில் ரசிகர்களால் அதிகம் பின்தொடரப்படும் அணிகளில் ஒன்றாகவும் RCB உள்ளது. இதனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை விற்பனை செய்ய, டியாஜியோ பிஎல்சி (Diageo Plc) நிறுவனம் ஒருபோதும் விரும்பாது என்பது தெளிவாகி இருக்கிறது. RCB விற்பனை செய்யப்படவில்லை என்ற தகவல் அறிந்ததும், அந்த அணியின் ரசிகர்கள் தற்போது மீண்டும் Happy Modeக்கு மாறியுள்ளனர்.