IPL முடிந்த கையோடு TNPL தொடர் தொடங்கி விட்டது. முன்னணி வீரர்கள் பலரும் விளையாடுவதால் இந்த தொடருக்கும் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில், நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதில் ஜூன் 8ம் தேதி ரவிச்சந்திரன் அஸ்வினின் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி, சாய் கிஷோரின் திருப்பூர் தமிழன்ஸ் அணியை எதிர்கொண்டது.
டாஸ் வென்ற சாய் கிஷோர் பவுலிங் தேர்வு செய்ய, திண்டுக்கல் அணி முதலில் பேட்டிங் செய்தது. போட்டியின்போது திண்டுக்கல் கேப்டன் அஸ்வின், பெண் நடுவரிடம் சண்டைக்கு சென்ற வீடியோ, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 6வது ஓவரை சாய் கிஷோர் வீச, அஸ்வின் எதிர்கொண்டார்.
அப்போது பந்து அவரது பேடில் உரசி சென்றது. இதைப்பார்த்த சாய் கிஷோர் LBW கேட்க, களத்தில் இருந்த நடுவரும் அவுட் கொடுத்து விட்டார். ஆனால் பந்து பிட்சிங் அவுட் சைடு தான் சென்றது. இதனால் ஆத்திரமடைந்த அஸ்வின் நடுவரிடம் சில நொடிகள் வாக்குவாதம் செய்தார்.
ஆனால் நடுவர் தனது முடிவை மாற்றிக் கொள்ளவில்லை. இதனால் பெவிலியனுக்கு திரும்பிய அஸ்வின், கோபத்துடன் தனது கிளவுஸை தூக்கி வீசிச் சென்றார். இதைப்பார்த்த ரசிகர்கள், ” யாராவது 6 ஓவர்கள் முடிவதற்கு முன்னால் வைடு பந்துக்கு, 2 DRSஐ வீணடிப்பார்களா?” என்று அஸ்வினை கண்டபடி விமர்சனம் செய்து வருகின்றனர்.
ஆரம்பத்தில் நன்றாக ஆடிய திண்டுக்கல் அணி, அஸ்வின் ஆட்டமிழந்ததும் சீட்டுக்கட்டு போல சரிந்து 93 ரன்களில் 16.2 ஓவர்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து Chasing செய்த திருப்பூர் தமிழன்ஸ் அணி, 11.2வது ஓவரிலேயே இலக்கை எட்டிப்பிடித்து அசத்தியது.