பொது சுகாதாரத் துறை நிபுணா் குழந்தைசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், தக்காளி காய்ச்சல், குழந்தைகளை அதிகளவில் பாதித்து வருகிறது என்றும், முதலில் தொண்டை வலி ஏற்பட்டு, ஓரிரு நாளில் காய்ச்சலாகவும், பின் கை, கால் பாதங்களில் கொப்பளம் மற்றும் அரிப்புடன் சிவப்பு நிறத்தில் மாறுதல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன என்றும் கூறப்பட்டுள்ளது.
சிலருக்கு மூட்டு வலி, உடல் வலி, கடுமையான நீரிழப்பு, சோர்வு, வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பாதிப்புகளும் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. கோடைக் காலம் துவங்கி இருப்பதால், குழந்தைகள் இத்தகைய உபாதையால் அதிகளவில் பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாகவுல் எப்போதும் அனைவரும் சுகாதாரத்துடன் இருப்பது அவசியம் என்று கூறப்பட்டுள்ளது.
பள்ளி செல்லும் குழந்தைகள், ஒவ்வொரு முறை நண்பர்களுடன் விளையாடி, வீட்டிற்கு வரும்போதும், கை, கால், முகம் கழுவுவது அவசியம் என்றும் தக்காளிக் காய்ச்சலை பொறுத்தவரையில், ஒரு வாரத்திற்குள் தானாகவே சரியாகி விடும் என்றும் அதேநேரம், பாதிப்புக்கு ஏற்ப, சிகிச்சை பெறுவது அவசியம் எனவும் கூறப்பட்டுள்ளது.