சிங்கத்தை அலேக்காகத் தூக்கிய பெண்

419
Advertisement

சிங்கத்தின் பெயரைக்கேட்டாலே தலைதெறிக்க ஓடுவோர் மத்தியில், ஓர் இளம்பெண் தைரியமாகத் தன்னுடைய குழந்தையைப்போல தூக்கிச்செல்வது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இந்த வருடத்தின் தொடக்க நாளான ஜனவரி 1ல் குவைத் நாட்டில் இந்த விசித்திர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அங்குள்ள சபாஹியா மாவட்டத்தில் வசித்துவரும் ஒரு பெண் தனது வீட்டில் செல்லப்பிராணியாக சிங்கம் ஒன்றை வளர்த்து வருகிறார். சமீபத்தில் அந்த சிங்கம் வீட்டைவிட்டு வெளியேறி அங்குள்ள தெருக்களில் அலைந்து திரியத் தொடங்கியது. அதைக்கண்ட குடியிருப்புவாசிகள் அச்சத்தில் உறைந்தனர்.

உடனே, போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். அங்குவந்த காவல்துறையினர் வனத்துறை அலுவலர்களுடன் இணைந்து சிங்கத்தைப் பிடிக்க முயன்றனர். அதற்குள், அந்தச் சிங்கம் வீட்டில் ஒரு பெண்மணியால் செல்லப்பிராணியாக வளர்க்கப்படுகிறது என்பதை அறிந்த காவல்துறையில், அப்பெண்ணுக்குத் தகவல்கொடுத்தனர்.

அப்பெண்ணும் தெருவுக்கு வந்து தன்னுடைய குழந்தையைத் தூக்கிச்செல்வதுபோல அந்த சிங்கத்தைத் தூக்கிச்சென்றார். அதன்பிறகே, தெருவாசிகளும் காவல்துறையினரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

சிங்கத்தை அலேக்காகத் தூக்கிச்செல்லும் பெண்ணின் வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

இளம்பெண்ணின் தைரியத்தையும் உடல் வலிமையையும் நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.