மீண்டும் மீண்டுமா..? எகிறிய CNG விலை!! மக்கள் தலையில் அடுத்த சுமை!!

நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கம், சாமானிய மக்களின் வாழ்க்கையை மேலும் சிரமப்படுத்தியுள்ளது. குறிப்பாக, இயற்கை எரிவாயு (CNG) விலை மீண்டும் ஒரு முறை உயர்த்தப்பட்டிருப்பது பொதுமக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது ஒரு கிலோ சிஎன்ஜி விலை ரூ.2 உயர்த்தப்பட்டதால், சென்னையில் அதன் விலை ரூ.93.50 ஆக உயர்ந்துள்ளது. வெறும் 14 நாட்களில் இது நான்காவது முறையாக உயர்த்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விலை உயர்வு மே 15 முதல் தொடங்கியது. அன்றைய தினம் ரூ.2 உயர்த்தப்பட்ட நிலையில், மே 18 அன்று மேலும் ரூ.1 உயர்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து மே 23 அன்று மீண்டும் ரூ.1 உயர்த்தப்பட்டு, தற்போது மேலும் ரூ.2 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த தொடர் உயர்வுகள் நடுத்தர மக்களின் குடும்பச் செலவுகளை பெரிதும் பாதித்துள்ளன.

இந்த நிலைமைக்கு முக்கிய காரணமாக மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழல் கூறப்படுகிறது. குறிப்பாக, ஹோர்முஸ் ஜலசந்தியில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு சிக்கல்கள் உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. உலகின் எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்தின் முக்கிய பாதையாக விளங்கும் இந்த நீரிணையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையை உயர்த்தியுள்ளது.

இதன் தாக்கம் இந்தியாவிலும் நேரடியாக உணரப்படுகிறது. பேருந்துகள், ஆட்டோக்கள், டாக்ஸிகள் உள்ளிட்ட பல பொதுப் போக்குவரத்து வாகனங்கள் சிஎன்ஜியை நம்பியுள்ளதால், கட்டண உயர்வு தவிர்க்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதனால், பொதுமக்களின் தினசரி செலவுகள் அதிகரித்து, பணவீக்கம் மேலும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Related News

Latest News