தென்கிழக்கு ஆப்பிரிக்க நாடான மடகாஸ்கரில் அரசியல் நெருக்கடி தீவிரமடைந்துள்ளது. சில வாரங்களுக்கு முன்பு அதிபர் ஆண்ட்ரி ரஜோலினா தனது முழு அமைச்சரவையையும் பதவி நீக்கம் செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு எதிராக இளைஞர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
முதலில் தண்ணீர் மற்றும் மின்சாரம் பற்றாக்குறை குறித்து குரல் எழுப்பிய இளைஞர்கள், தற்போது அரசின் செயல்பாடுகள் மோசமடைந்துவிட்டதாக குற்றம் சாட்டி, அதிபர் ரஜோலினா பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். ஊழல் மற்றும் குடும்ப வாரிசு அரசியலுக்கு எதிராக கிளர்ந்தெழுந்துள்ள 1,000க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள், தலைநகரான அந்தனானரிவோவில் சாலைகளில் டயர்கள் மற்றும் தடுப்புகளை எரித்து தங்களது கோபத்தை வெளிப்படுத்தினர்.
போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில், பாதுகாப்புப் படையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி கூட்டத்தை கலைக்க முயன்றனர். இதன்போது மோதல்கள் வெடித்து, 22 பேர் உயிரிழந்ததாக ஐ.நா. அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.
மடகாஸ்கரில் நிலைமை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதாகவும், அமைதியை நிலைநிறுத்த சர்வதேச சமூகம் தலையீடு செய்ய வேண்டும் எனவும் மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. நேபாளத்தில் சமீபத்தில் இடம்பெற்ற இளைஞர் கிளர்ச்சிக்குப் பின், இப்போது மடகாஸ்கர் நாடிலும் ஜென்-Zee தலைமுறை இளைஞர்கள் அரசுக்கு எதிராக எழுந்திருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.
