ஹாரன் ஒலிக்க நீதிமன்றம் தடை

468
Advertisement

ஹாரன் ஒலிக்க நீதிமன்றம் விதித்துள்ள தடை உத்தரவால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

வாகனம் ஓட்டுபவர்களுக்கு ஹாரன் ஒலியெழுப்புவது எந்தளவுக்கு முக்கியத்துவம் என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை. நெரிசலான பகுதிகளில் வழி கிடைப்பதற்கு மட்டுமன்றி, வாகனத்தில் பயணித்துக்கொண்டிருக்கும்போது கவனக்குறைவாகவோ, அவசர கதி காரணமாகவோ யாரும் விபத்தில் சிக்கி விடக்கூடாது என்பதற்காக எழுப்பப்படும் ஒலி பலருக்கு இடையூறாகவும் அமைந்துவிடுகிறது.

இந்த நிலையில், ஹாரன் ஒலி எழுப்புவதற்கு நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
ஆனால், இந்தத் தடை உத்தரவு நம்நாட்டில் அல்ல, கனடாவில்.
எதற்காக இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது விநோதமாக உள்ளது.

கனடா நாட்டில் கொரோனா கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கொரோனா தடுப்பூசிகளை எதிர்த்தும் லாரி ஓட்டுநர்களும் சமூக ஆர்வலர்களும் போராடி வருகின்றனர். இந்தப் போராட்டத்தால் ஒரு வாரத்துக்கும் மேலாக அந்த நகரம் முடங்கியது.

போராட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பவதைத் துண்டிக்க போலீசார் முயன்றனர். இதனைக் கண்டித்து லாரி ஓட்டுநர்கள் வாகனங்களின் ஹாரன்களை நீண்டநேரம் ஒலிக்கச்செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டம் பொதுமக்களுக்கும் வியாபாரிகளுக்கும் இடையூறாக இருப்பதாகக்கூறி ஒட்டாவா பகுதி முழுவதும் அவசர நிலை அறிவிப்பை வெளியிட்டார் அதன் மேயர்.

இந்த நிலையில் வாகன ஓட்டிகள் அடுத்த 10 நாட்களுக்கு ஹாரன் ஒலி எழுப்ப ஒன்றாரியோ உயர்நீதிமன்ற நீதிபதி தடைவித்து உத்தரவிட்டுள்ளார்.

சில மாதங்களுக்கு முந்தைய இந்தத் தடை உத்தரவு தற்போது வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.