பாம்பைக் கடித்தே கொன்ற பராக்கிரம வாலிபர்

206
Advertisement

ஓடுற பாம்பை மிதிக்கிற வயது என்பது சிறுவர்களின்
பயமறியா தைரியத்தைக் குறிப்பதற்காக சொல்லப்பட்ட
ஒரு பழமொழி.

ஆனால், 45 வயது ஒடிசா மாநில வாலிபர் ஒருவர் தன்னைக்
கடித்துவிட்டுச் சென்ற பாம்பை விரட்டிச் சென்று பிடித்துக்
கடித்தே கொன்ற சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பாம்பு செத்துப்போனது, வாலிபர் பிழைத்துக்கொண்டார்.

பாம்பைக் கடித்தே கொன்ற தைரியசாலி கிஷோர் பத்ரா,
ஒடிசா மாநிலம், கேம்பரிபட்டியா என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர்.

ஒரு நாள் இரவு நேரத்தில் வயலில் வேலைசெய்துவிட்டு வீட்டுக்கு
வந்துகொண்டிருந்திருக்கிறார். நடந்து வந்துகொண்டிருந்தபோது
திடீரென்று காலில் ஏதோ எறும்பு கடித்ததுபோன்று உணர்ந்திருக்கிறார்.

என்றாலும், பதற்றம் அடையாமல் திரும்பிப் பார்த்திருக்கிறார்.
அங்கு பாம்பு ஒன்று விறுவிறுவென்று ஊர்ந்து சென்றுகொண்டிருப்பதைக்
கண்டார். தன்னைக் கடித்தது அந்தப் பாம்பு தான் என்பதைப் புரிந்துகொண்ட
கிஷோர்பத்ரா உடனடியாக அந்தப் பாம்பை விரட்டிச் சென்று கையில் பிடித்தார்.

நறுக் நறுக்கென்று கோபம் தீரக் கடித்தார்.
அந்தோ பரிதாபம் கிஷோரின் கடி தாங்க முடியாமல் செத்துப்போனது.
அத்துடன் கிஷோர் விட்டுவிடவில்லை.

செத்துப்போன பாம்பைக் கையில் எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்குச்
சென்றார். சிகிச்சைக்குப் பிறகு நலமுடன் இருப்பதாக கிஷோர் பத்ரா கூறியுள்ளார்.

இரவில் சுறுசுறுப்பாக செயல்படும் கிரைட் இனப் பாம்புதான்
கிஷோரைக் கடித்துள்ளது. தான் கடித்தபோது கிஷோர் பட்ட
வேதனையை இப்போது அந்தப் பாம்பும் உணர்ந்திருக்குமோ…?