தமிழக அரசியல் களத்தில் யாரும் எதிர்பாராத ஒரு மாபெரும் அரசியல் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் தோல்வியிலிருந்து திமுக மீண்டு வருவதற்குள், கட்சியின் அடிமட்டத் தூண்களாகக் கருதப்படும் ஒன்றியச் செயலாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் நடிகர் விஜய்யின் தவெக கட்சியில் இணைந்துள்ளனர். இந்தத் தகவல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ள நிலையில் கட்சியைச் சீரமைக்க அவர் போர்க்கால அடிப்படையில் களமிறங்கியுள்ளார்.
திமுகவின் தேர்தல் தோல்விக்குப் பின் அக்கட்சியின் உட்கட்டமைப்பு பலவீனமடைந்துள்ளதைச் சாதகமாக்கிக் கொண்டு, தவெக தலைமை இந்த ரகசிய ஆப்ரேஷனை நடத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழகம் முழுவதும் திமுகவின் வாக்கு வங்கியைத் தீர்மானிக்கும் சக்திகளாக இருக்கும் 113 ஒன்றியச் செயலாளர்கள் ஒரே நேரத்தில் தவெக பக்கம் சாய்ந்திருப்பது திமுகவின் அடிமட்டக் கட்டமைப்பைப் பதம் பார்த்துள்ளது.இந்த விவகாரத்தால் சுதாரித்துக் கொண்டுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், உடனடியாகச் அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.
அந்த வகையில் , திமுகவின் அவசர பொதுக்குழுவைக் கூட்டி, உடனடியாக உள்கட்சி அமைப்புத் தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கட்சிக்குத் துரோகம் செய்தவர்களை நீக்கிவிட்டு, புதிய முகங்களை நியமிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. கட்சியைத் தற்காத்துக் கொள்ளவும், தவெக-வின் இளைஞர் ஈர்ப்பு வியூகத்தை முறியடிக்கவும் திமுக தற்போது புதிய அஸ்திரத்தைக் கையில் எடுத்துள்ளது.
