இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான டிசிஎஸ் சமீபத்தில் தங்கள் ஊழியர்களில் 2% பேரை பணியிலிருந்து நீக்கம் செய்தது. இதனால் பல ஊழியர்கள் நிறுவனத்தில் மேலும் அதிருப்தி வெளிப்படுத்தி வருகின்றனர். அத்துடன், புனேவில் உள்ள டிசிஎஸ் அலுவலகத்திற்கு வெளியே ஒரு ஊழியர் நடைபாதையில் படுத்து உறங்கிய சம்பவமும் சமூகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது டிசிஎஸ் நிறுவனம் தனக்கு 4 மாத சம்பளத்தை வழங்கவில்லை என புனே அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர் குற்றம்சாட்டியுள்ளார். சௌரப் மோர் என்ற ஊழியர் புனே டிசிஎஸ் அலுவலகத்தில் வேலை செய்து வருகிறார். இவர் திடீரென ஆகஸ்ட் 2ஆம் தேதி அன்று அலுவலக கட்டடத்திற்கு வெளியே நடைபாதையிலேயே படுத்து உறங்கியுள்ளார். இதற்கான காரணத்தையும் ஒரு கடிதமாக எழுதி அருகிலேயே வைத்திருக்கிறார்.
அந்த கடிதத்தில், நான் டிசிஎஸ் நிறுவனத்தில் வேலை செய்கிறேன் இங்கே எனக்கு 4 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை. என்னுடைய ஹெச்.ஆரிடம் என்னுடைய சம்பளத்தை வழங்குங்கள் என கேட்டேன். ஜூலை 31ஆம் தேதி சம்பளம் வந்துவிடும் என கூறினார்கள் ஆனால் இதுவரை வரவில்லை. இதையடுத்து என்னிடம் பணம் இல்லை நான் நடைபாதையில் தங்க போகிறேன் என ஏற்கனவே ஹெச்.ஆருக்கு தெரிவித்துவிட்டேன் என கூறியுள்ளார்.
டிசிஎஸ் விளக்கம்
சௌரப் மோர் என்ற அந்த ஊழியர் நிறுவனத்தின் அங்கீகாரம் பெறாமல் திடீரென விடுப்பு எடுத்து கொண்டதாகவும் மீண்டும் வந்து பணியில் சேராமல் தவிர்த்து வந்ததாகவும் கூறியுள்ளது. நிறுவனத்தின் விதிமுறைப்படி ஒரு ஊழியர் நிறுவன அங்கீகாரம் இல்லாமல் விடுப்பு எடுத்தால் அவர்களின் சம்பளம் நிறுத்தி வைக்கப்படும். அதன்படி தான் இவரது சம்பளமும் நிறுத்தி வைக்கப்பட்டது என கூறியுள்ளது. இது நிறுவனத்தின் வழக்கமான ஒரு நடைமுறைதான் என்றும் அந்த ஊழியரை அழைத்து பேசி இருக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளது.