சென்னையிலும் தமிழகத்தின் பிற பகுதிகளிலும் சொத்து விற்பனை மற்றும் பரிமாற்றங்களில் நீண்டகாலமாகத் தொடர்ந்த ஒரு பெரும் சவாலுக்குத் தீர்வு காணும் வகையில், பதிவுத்துறை தற்போது அதிரடியான புதிய நடைமுறை ஒன்றை கொண்டுவந்துள்ளது.
பொதுவாக தமிழகத்தில் சொத்துப் பத்திரங்களைச் சமர்ப்பிக்கும் போது, அவை அரசாங்கம் நிர்ணயித்துள்ள வழிகாட்டி மதிப்புப்படியே பதியப்பட வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது.சர்வே எண் வாரியாகவும், தெருக்களின் முக்கியத்துவத்தைப் பொறுத்தும் நிலங்களுக்குத் தனித்தனியாக மதிப்புகள் நிர்ணயிக்கப்படுகின்றன. ஆனால், காலப்போக்கில் அந்தப் பகுதிகளில் நிலவும் சந்தை மதிப்பை விட, அரசாங்கத்தின் வழிகாட்டி மதிப்பு பல இடங்களில் மிக அதிகமாக உயர்ந்து காணப்படுகிறது.
இத்தகைய சூழலில் விற்பனையாளர்களும் வாங்குபவர்களும் கூடுதல் முத்திரை தீர்வை மற்றும் பதிவு கட்டணத்தை செலுத்த வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாகிறார்கள். சிறிய தொகையாக இருந்தால் மக்கள் இதைப் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை, ஆனால் லட்சக்கணக்கில் கூடுதல் செலவு ஏற்படும் போது, சாதாரண மக்கள் பெரும் தவிப்புக்கு ஆளாகிறார்கள் என்பதை மறுக்க முடியாது.
இந்நிலையில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு இந்த நடைமுறைகளில் பெரும் தெளிவு ஏற்பட்டுள்ளதாகப் பதிவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.அமலுக்கு வந்துள்ள “ஸ்டார் 3.0” என்ற நவீன மென்பொருள், இந்தச் சிக்கலை எளிதாகக் கையாள வழிவகை செய்துள்ளது. இந்த மென்பொருளில் சொத்து விற்பனைக்கான அடிப்படை விவரங்களைப் பதிவு செய்யும்போதே, அரசாங்க வழிகாட்டி மதிப்புக்கும், பத்திரத்தில் உள்ள சந்தை மதிப்புக்கும் இடையே உள்ள வேறுபாடு தானாகவே துல்லியமாகக் கண்டறியப்படுகிறது. ஒருவேளை வழிகாட்டி மதிப்பை விட பத்திரத்தின் மதிப்பு குறைவாக இருந்தால், சம்பந்தப்பட்ட ஆவணம் தானியங்கி முறையில் மேல்முறையீட்டுக்காக மாவட்ட பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் வகையில் மென்பொருள் மேம்படுத்தப்பட்டுள்ளது.
இந்த செயல்முறையில் சார்-பதிவாளர்கள் உரிய ஒத்துழைப்பை வழங்கினால், பொதுமக்கள் எந்தவிதமான அலைச்சலுக்கும் உள்ளாக வேண்டியதில்லை. சம்பந்தப்பட்ட பத்திரத்தின் பிரதி கைக்கு வருவதற்கு முன்னரே, மேல்முறையீட்டுக்கான பணிகள் தொடங்கி விடுவதால், கால விரயம் முற்றிலும் தவிர்க்கப்படுகிறது.
மக்களின் சிரமங்களைக் குறைக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள இந்தத் தொழில்நுட்ப வசதி, சொத்து பரிமாற்றங்களில் ஒளிவுமறைவற்ற தன்மையை உறுதி செய்வதோடு, அரசு நிர்ணயித்துள்ள மதிப்பில் ஏதேனும் முரண்பாடுகள் இருந்தால் அதனைச் சரிசெய்யக் கிடைத்த ஒரு பொன்னான வாய்ப்பாகப் பார்க்கப்படுகிறது.
