பொதுவாக IPL அணியின் உரிமையாளர்கள் மைதானத்திற்கு வந்து, தங்களின் அணியை உற்சாகப் படுத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். நீதா அம்பானி, காவ்யா மாறன், பிரீத்தி ஜிந்தா, ஷாரூக்கான், சஞ்சீவ் கோயங்கா, சீனிவாசன், பார்த் ஜிண்டால் என மற்ற அணிகளின் உரிமையாளர்கள் குறித்து ரசிகர்கள் தெரிந்து வைத்துள்ளனர்.
ஆனால் RCB அணியின் உரிமையாளர் குறித்து பெரும்பாலோனோருக்கு தெரியவில்லை. தற்போது பெங்களூரு கோப்பை வென்றுள்ளதால், இணையத்தில் அதன் உரிமையாளர் குறித்து அதிகளவு தேடி வருகின்றனர். அந்தவகையில் RCBயின் தற்போதைய உரிமையாளர் மற்றும் சொத்து மதிப்பு குறித்து இங்கே பார்க்கலாம்.
கடந்த 2008ம் ஆண்டு உருவாக்கப்பட்ட IPL அணிகளில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவும் ஒன்று. இந்த அணியில் இருந்து தான், உலகின் தலைசிறந்த வீரராக விராட் கோலி உருவெடுத்தார். ஆரம்பத்தில் RCB உரிமையாளராக இருந்த விஜய் மல்லையா, கடன் தொல்லையால் வெளிநாட்டுக்கு தப்பிச்சென்று விட்டார். இதனால் 2016ம் ஆண்டுடன் பெங்களூரு அணி மீதான, விஜய் மல்லையாவின் உரிமையும் முடிவுக்கு வந்தது.
அதற்குப்பிறகு இந்த அணியை யுனைடெட் ஸ்பிரிட்ஸ் என்னும் மதுபான நிறுவனம் வாங்கியது. இந்த நிறுவனத்தின் தற்போதைய நிர்வாக இயக்குநரும், தலைமை நிறுவன அதிகாரியுமான ஹினா நாகராஜன் (Hina Nagarajan) தான் பெங்களூரு அணியின் உரிமையாளர். உலகின் 2வது மிகப்பெரிய மதுபான உற்பத்தி நிறுவனமான யுனைடெட் ஸ்பிரிட்ஸின், நிகர சொத்து மதிப்பு ரூபாய் 1 லட்சத்து 24 ஆயிரம் கோடியாக உள்ளது.