சொந்த மண்ணில் மீண்டும் ஒரு தோல்வியைத் தழுவி, அதிர்ச்சி அளித்துள்ளது குஜராத் டைட்டன்ஸ். கடைசி போட்டி என்பதால் Toss வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ், துணிச்சலாக பேட்டிங் தேர்வு செய்தது. இதற்கு கைமேல் பலனாக, 83 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத்தை தோற்கடித்து, மீண்டும் வெற்றிப்பாதைக்குத் திரும்பியுள்ளது.
ஆயுஷ் மாத்ரே, உர்வில் படேல், பிரேவிஸ் என சென்னையின் இளம் சிங்கங்கள் குஜராத் பந்துவீச்சை சிதைத்து விட்டனர். நீண்ட நாட்கள் கழித்து ஓபனிங் இறங்கிய கான்வேவும் 52 ரன்கள் அடித்து வெற்றிக்கு உதவினார். பந்துவீச்சில் இளம்வீரர் அன்ஷூல் கம்போஜ், வெறும் 13 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
நீண்ட வருடங்கள் கழித்து பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே CSK மிரட்டி விட்டது. டேபிளில் கடைசி இடம் என்றாலும் CSK மீண்டும் பார்முக்குத் திரும்பியுள்ளது, ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது.
இந்தநிலையில் ரசிகர்களின் மகிழ்ச்சியை மேலும் அதிகரிப்பது போல, முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா மீண்டும் அணியில் இணையவிருக்கிறார். இந்தமுறை வீரராக இல்லாமல் பேட்டிங் பயிற்சியாளராக வரவுள்ளாராம்.
சென்னை – குஜராத் போட்டியை ஆகாஷ் சோப்ரா, சுரேஷ் ரெய்னா இருவரும் வர்ணனை செய்தனர். அப்போது ரெய்னா, ” சென்னை அணி புதிய பேட்டிங் பயிற்சியாளரைத் தேடி வருகிறது,” என்றார். இதைக்கேட்ட சோப்ரா, ” அந்த பயிற்சியாளரின் பெயர் ‘எஸ்’ என்னும் எழுத்தில் தொடங்குமா?” என்று கேட்டார்.
பதிலுக்கு ரெய்னா, ”ஆமாம். அவர் குறைந்த பந்துகளில் அதிவேக அரைசதம் அடித்திருக்கிறார்,” என பதில் அளித்தார். அடுத்து பேசிய சோப்ரா, ” உறுதியாகி விட்டது. நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது உண்மைதான்” என கூறினார்.
2014ம் ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக, 16 பந்துகளில் ரெய்னா அரை சதமடித்து இருக்கிறார். இதைக்கேட்ட ரசிகர்கள், ”அப்போ 2026 IPL கப்பு நமக்குத்தான்” என்று சமூக வலைதளங்களில் கொண்டாடிக் கொளுத்தி வருகின்றனர்.
கடந்த 2018ம் ஆண்டில் இருந்து சென்னை அணியின் பயிற்சியாளராக, ஆஸ்திரேலிய வீரர் மைக் ஹஸ்ஸி பணியாற்றி வருகிறார். தற்போது அவரை மாற்றுவதற்கு CSK நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.